ஜல்லிக்கட்டு கலவரம்.. விசாரணைக் குழுவிற்கு 3 மாதம் கால நீடிப்பு
ஜல்லிக்கட்டுக் கலவரத்தை விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் குழுவிற்கு 3 மாதம் கால நீடிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரித்து வரும் ராஜேஷ்வரன் குழுவிற்கு 3 மாதம் கால நீடிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகச் சென்னை மெரினாவில் தொடர் போராட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் முடிவில் கலவரம் வெடித்தது.
இந்தக் கலவரத்தில் போலீசாரே குடிசைகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இது பெரும் அதிர்ச்சியைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்தியது.
ஒரு நபர் விசாரணைக் குழு
இதனையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு ஒன்றை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அமைத்தார். இந்தக் குழு கலவரம் குறித்து தமிழகம் முழுவதும் விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
கால அவகாசம் கோரல்
சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் இந்தக் குழு விசாரணை நடத்தியது. ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த புகார்கள் அதிக அளவில் வருவதால் விசாரித்து முடிக்கக் கூடுதலாக 4 மாதம் தேவைப்படுவதாகக் கூறி கால அவகாசம் தமிழக அரசிடம் கேட்டிருந்தார் ராஜேஷ்வரன்.
கால நீடிப்பு
இதனைத் தொடர்ந்து ராஜேஷ்வரன் குழுவிற்கு 3 மாதம் கால நீடிப்பு வழங்கியுள்ளது தமிழக அரசு. இந்தக் காலக்கெடுவிற்குள் அவர் முழுமையான விசாரணையை நடத்தி முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கால தாமதம்
ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து முழு விசாரணை நடத்தி 3 மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், விசாரித்து முடிக்க மேலும் 3 மாதங்கள் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதால் விசாரணை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.