இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சஸ்பெண்ட்
சென்னை: இளம்பெண் பிரியதர்ஷினியை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்ய மறுத்த ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
காதலித்து ஏமாற்றியதோடு வரதட்சணை புகாரில் சிக்கிய வருண்குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 25). இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்தபோது, அதே மையத்தில் படித்த திருச்சியைச் சேர்ந்த வருண்குமார் (27) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
கடந்த 2011-ம் ஆண்டு இரு வீட்டாரும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கிடையே வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்பின்னர் அவர் பிரியதர்ஷினி குடும்பத்தினரிடம் வரதட்சணையாக லட்சக்கணக்கில் பணமும், 2 கிலோ தங்கமும், சொகுசு காரும் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரியதர்ஷினி சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். அதன்பேரில் வரதட்சணை ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் போலீஸ் அதிகாரியாக வருண்குமார் நியமிக்கப்பட்டார். தன்னை கைது செய்யாமல் இருக்க ஹைகோர்ட் முன்ஜாமீன் மனு கோரினார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனுவும் கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி ஆனது.
இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில், அவர் சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து வருண்குமாரை அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
வருண்குமாரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிகோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி சாந்தி தள்ளுபடி செய்தார்.
வருண்குமார் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை பெருநகர 11-வது கோர்ட்டில் ஐ.பி.எஸ். மனுதாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனுமீதான விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால், தனக்கு முதுகுவலி மற்றும் நெஞ்சுவலி எனக் கூறியதால், வருண்குமார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாரை தமிழக உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இதற்கான உத்தரவை ராயப்பேட்டையில் மருத்துவமனையில் உள்ள வருண் குமாரிடம் வழங்கப்பட்டது.