வகுப்புவாத சக்திகள் பலம் பெற்று வருவது நாட்டுக்கு நல்லதல்ல: முத்தரசன்
வகுப்புவாத சக்திகள் பலம்பெற்று வருவது நாட்டுக்கு நல்லதல்ல என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: வகுப்புவாத சக்திகள் பலம் பெற்று வருவது நாட்டுக்கு நல்லதல்ல என்று விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தல் முறையில் மாற்றம் தேவை
விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு விழுப்புரத்தில் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த மாநாட்டில் வேலைவாய்ப்பு, அனைவருக்கும் வீடு, இலவச மருத்துவம் உள்ளிட்ட முக்கிய பல கருத்துக்களை தீர்மானமாக நிறைவேற்ற உள்ளோம். கர்நாடகாவில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடித்து பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி 37.9 சதவீதமும், பா.ஜ-.க. 37.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஒட்டுமொத்த வாக்காளர்களில் காங்கிரஸ் கட்சிக்குதான் ஓட்டு அதிகம். இந்த தேர்தல் முறை தவறானது. இது மாற்றப்பட வேண்டும். விகிதாச்சார தேர்தல் முறை வந்தால்தான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்க முடியும். 56 சதவீத வாக்குகள் பா.ஜ.க.விற்கு எதிராக பதிவாகியுள்ளது என்பதுதான் யதார்த்தமான உண்மை. உடனடியாக தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
ஒன்றுபட்டு போராட வேண்டும்
அதே சமயம் வகுப்புவாத சக்திகள் பலம் பெற்று வருவது நாட்டுக்கு நல்லதல்ல. அவர்களுக்கு எதிராக இடதுசாரிகள், ஜனநாயக, மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் முன்பைவிட தற்போது ஒன்றுபட்டு போராட வேண்டியது அவசியம். காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு, வேண்டுமென்றே நடுவர் மன்ற தீர்ப்பையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
தமிழர்களுக்கு பச்சை துரோகம்
காவிரி தொடர்பாக வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அது மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதா? என்று நீதிமன்றமும் கேட்கவில்லை. அதுபற்றி மத்திய அரசின் தலைமை நீதிபதியும் விளக்கம் அளிக்கவில்லை. மிகவும் குழப்பம் நிறைந்த வரைவு திட்டமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு செய்த பச்சை துரோகம் மட்டுமின்றி தமிழ்நாட்டை புறக்கணிக்கிற செயலை மோடி அரசு செய்து வருவது ஏற்புடையது அல்ல. 17-ந் தேதி நீதிமன்ற கருத்துக்கள், முடிவின் அடிப்படையில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இதில் தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்து தீவிர போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
நல்லகண்ணு பங்கேற்க மாட்டார்
நடிகர் கமல், 19-ந் தேதி ஒரு கூட்டத்தை நடத்துவதாகவும், அதற்கு ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கி நடத்துவதாகவும் கூறியிருக்கிறார். இது முற்றிலும் தவறான செய்தி. இதுபோன்று கமல் அறிவிக்கும்போது நல்லக்கண்ணுவிடம் கேட்டு உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். அல்லது மாநில கட்சியிடம் கேட்டு அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை. இந்த கூட்டத்தில் நல்லக்கண்ணு பங்கேற்க மாட்டார். கமல் கூறிய கருத்தை மறுக்கிறேன்.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.