கோரக்பூர்: இனிமேல் குழந்தைகள் உயிரிழப்பு கூடாது... கமல்ஹாசன் ட்விட்டரில் சீற்றம்!
சென்னை: உத்தரபிரதேசத்தில் இனிமேல் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்படக்கூடாது, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டரில் வலியுறுத்தியுள்ளார்.
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து நீதி விசாரணை நடத்த உ.பி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கோரக்பூரில் உத்திரபிரதேச அரசால் பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நோய் தொற்று மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் கொத்து கொத்தாக இறந்தன.
பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லூரியில் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் குழந்தைகள் பிரிவில் இருந்த 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ஆகஸ்ட் 7ம் தேதி 9 குழந்தைகள், ஆகஸ்ட் 8ம் தேதி 12 குழந்தைகள், 9ம் தேதி 9 குழந்தைகள், 10ம் தேதி 23 குழந்தைகள் மற்றும் ஆகஸ்ட்11ம் தேதி 7 குழந்தைகளும் என மொத்தம் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்ததாக சொல்வது உண்மையல்ல என்று மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. வினியோகஸ்தருக்கு ரூ.66 லட்சம் பாக்கியை அரசு செலுத்தாததால், ஆக்ஸிஜன் சப்ளை பாதிக்கப்பட்டாலும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
எனினும் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவிவிலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
Children of UP die. @k_satyarthi's request to UP CM is the best course. See that it never happens again. India mourns its loss.
— Kamal Haasan (@ikamalhaasan) August 13, 2017
நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தைகள் நலன் செயல்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தி அவர்களே, உத்தரபிரதேச முதலமைச்சரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துங்கள்.. இனியும் உயிரிழப்புகள் கூடாது... குழந்தைகளின் மரணத்திற்கு இந்தியாவே இரங்கல் தெரிவிக்கிறது என்று பதிவிட்டுள்ள்ளார்.