மதுரை அரசு மருத்துவமனை அம்மா உணவகம்; சென்னை தங்கசாலை மேம்பாலம்: ஜெ. திறந்து வைத்தார்
சென்னை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அம்மா உணவகத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை திறந்துவைத்தார். இதையடுத்து மேயர் உள்ளிட்டோர் முதல் விற்பனையை ஆரம்பித்துவைத்தனர்.
மதுரையில் மேலவாசல், புதூர் மாநகராட்சி மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் ஏற்கெனவே அம்மா உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்தநிலையில் ஏழை நோயாளிகளும், பொதுமக்களும் பயன்படும் வகையில் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுக்கு முன்புறம் ரூ.25 லட்சத்தில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. அதில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், காற்றோட்ட வசதி, சூரிய சக்தியில் செயல்படும் வெந்நீர் அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அம்மா உணவகத்தினை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை மாலை திறந்துவைத்தார். இதையடுத்து மருத்துவமனை அம்மா உணவகம் அருகே இருந்த பந்தலில் மாநகராட்சி மேயர் வி.ராஜன்செல்லப்பா அம்மா உணவகத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டைத் திறந்துவைத்தார்.

மேம்பாலம், சுரங்கப் பாதை
வடசென்னையில் தங்க சாலை மணிக்கூண்டு அருகேயும், ஸ்டான்லி ஆஸ்பத்திரி அருகேயும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மாநகராட்சி சார்பில் பாலம் கட்ட கடந்த 2009-ம் ஆண்டு திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
இதில் தங்கசாலை மணிக்கூண்டு அருகே ரூ.23 கோடி செலவில் 4 வழிபாதையாக உயர்மட்ட மேம்பாலமும், ஸ்டான்லி அருகே எம்.சி.சாலையில் ரூ.10.56 கோடி செலவில் சுரங்கப்பாதையும் கட்டப்பட்டு வந்தன. இந்த பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராக இருந்தது.
இந்த 2 திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதே போல் அண்ணாநகர் மண்டலம் ஷெனாய் நகரில் மாநகராட்சி சார்பில் ரூ.18.05 கோடி செலவில் புதிதாக நவீன கலையரங்கமும் கட்டப்பட்டு இருந்தது. இந்த கலையரங்கத்தையும் முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருச்சி குடிநீர் திட்டம்
திருச்சி மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் ரூ.221.42 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் அபிவிருத்தி திட்டங்களையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மாட்டுத்தாவணி ஆம்னி பஸ்நிலையம்
மேலும் மதுரை மாநகராட்சியில் மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் நிலையம், போளூர் ஒன்றியம் படவீடு மற்றும் கும்பகோணம், அனத்த நல்லூர் ஒன்றியங்களில் கூட்டு குடிநீர் திட்டங்களையும் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு துறை செயலாளர் பணீந்திரரெட்டி பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications