முண்டே மறைவு மராட்டியத்திற்கும், பாஜகவிற்கும் மிகப்பெரிய இழப்பு... ஜெயலலிதா இரங்கல்
சென்னை: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவால் மராட்டியம் நல்ல நாடாளுமன்றவாதியை இழந்து விட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டெ, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அன்னாரது மறைவுக்கு தலைவர்கள் நேரிலும், அறிக்கை வாயிலாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மத்திய கிராமப்புற வளர்ச்சி துறை, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் துப்புறவு துறை அமைச்சர் கோபிநாத் முண்டே இன்று காலை 6.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த துயரம் அடைந்தேன்.
ஒரு சிறந்த நாடாளுமன்ற வாதியை இந்திய நாடு குறிப்பாக மராட்டியம் இழந்து விட்டது. மராட்டிய சட்டசபையில் 1992 முதல் 1995-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராகவும், 1995 முதல் 1999 வரை மராட்டிய துணை முதல்வராகவும் பணி புரிந்துள்ளார். 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பல்வேறு நாடாளுமன்ற கமிட்டிகளில் தலைவராகவும், உறுப்பினராகவும் பணி புரிந்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியில் கோபிநாத் முண்டே மதிப்பு மிக்க மூத்த தலைவராக விளங்கினார். மராட்டிய அரசிலும், கட்சியிலும் பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்கினார்.
அவரது மறைவு மராட்டிய மக்களுக்கும், பாரதீய ஜனதா தொண்டர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும. அவரது மறைவால் இந்தியா குறிப்பாக மராட்டிய மக்கள் சிறந்த நாடாளுமன்றவாதியை இழந்து விட்டது. சிறந்த பண்பாளராகவும், உண்மையான நாட்டு பற்றுடனும் பணியாற்றியவர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவரது மறைவை தாங்கிக் கொள்ளும் சக்தியை குடும்பத்தினருக்கு வழங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அதிமுக சார்பில் அக்கட்சியினர் முண்டே உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications