ஜெயலலிதா தண்டனைக்கு எதிர்ப்பு: கோயம்பேடு மார்க்கெட் நாளை முழு அடைப்பு
சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி செவ்வாய்கிழமையன்று கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் அடைக்கப்படும் என்று மொத்த, சில்லறை வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மொத்த மற்றும் சில்லறை காய்கறிகடைகள் அடைக்கப்படுகின்றன. மேலும் பூ மற்றும் பழம் மார்க்கெட்டுகளும் மூடப்படுகின்றன. மாலை 6 மணிக்கு பிறகு கடைகள் திறக்கப்படும்.
ஜெயலலிதா விடுதலை
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காய்கறி மார்க்கெட் கமிட்டி உறுப்பினர் சவுந்திரராஜன், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் ஒட்டு மொத்தமாக நாளை கடை அடைப்பு போராட்டம் நடத்துகிறோம்.
2800 கடைகள் மூடல்
மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி கடைகள் 2800 உள்ளன. இவை அனைத்தும் மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மலர் வியாபாரிகள் ஆதரவு
சென்னை கோயம்பேடு மொத்த மலர் வியாபாரிகள் சங்க தலைவர் அருள் விசுவாசம் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 700 பூக்கடைகளும் நாளை மூடப்படுகிறது என்றார்.
பழக்கடைகளும் அடைப்பு
இதே போல பழ வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன், கோயம்பேட்டில் பழக் கடைகள் அனைத்தும் நாளை மூடப்படும் என்றார்.
வியாபாரம் பாதிப்பு
சென்னையில் உள்ள கோயம்போடு காய்கறிச் சந்தை தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையாகும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் விளைவிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. தினசரி பலகோடி ரூபாய் பொருட்கள் விற்பனையாகின்றன. நாளை ஒருநாள் கடைகள் மூடப்படுவதால் பலகோடி ரூபாய் விற்பனை பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.