பொதுச்செயலர் பதவி கிடைத்தாலும் எடப்பாடியுடன் சேரவேகூடாது.. ஓபிஎஸ்-க்கு முட்டுக்கட்டை போடும் முனுசாமி
எடப்பாடி கோஷ்டியுடன் சேருவதற்கு ஓபிஎஸ் அணியில் கேபி முனுசாமிதான் கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: எடப்பாடி கோஷ்டியுடன் ஒருபோதும் சேரவே கூடாது என ஓபிஎஸ்-க்கு முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கடும் நெருக்கடி கொடுத்து வருவகின்றனராம்.
எடப்பாடி கோஷ்டியுடன் ஓபிஎஸ் கோஷ்டி பேச்சுவார்த்தைகளை மும்முரமாக நடத்தி வருகிறது. ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இருக்கின்றனர்.
பொதுச்செயலர் ஓபிஎஸ்
இதில் ஓபிஎஸ்-க்கு பொதுச்செயலர் பதவியை தர எடப்பாடி தரப்பு ஒப்புதல் தெரிவிக்கிறதாம். இருந்தாலும் முதல்வர் பதவி மீது ஒரு கண்வைத்தபடியே ஓபிஎஸ் காய்களை நகர்த்தி வருகிறார்.
சந்தேகப்படும் முனுசாமி
அதேநேரத்தில் அதிமுகவில் ஏற்கனவே முக்கியத்துவம் இல்லாமல் ஒதுக்கப்பட்ட தங்களுக்கு மீண்டும் முக்கியத்துவம் கிடைக்குமா? என சந்தேகப்படுகின்றனர் முனுசாமி உள்ளிட்டோர். இதனால் பேச்சுவார்த்தையே கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர்.
ஜெயக்குமார் மீது விமர்சனம்
மேலும் எடப்பாடி கோஷ்டியில் பேச்சுவார்த்தை குறித்து பேட்டியளித்து வரும் ஜெயக்குமாரை ஜோக்கர் என்பது உள்ளிட்ட கடுமையான சொற்களில் விமர்சித்தும் வருகின்றனர் முனுசாமி தரப்பினர். அப்படியாவது பேச்சுவார்த்தை முறிந்துபோகட்டும் என்பதால் இப்படி நடந்து கொள்கின்றனர் என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
குழம்பும் ஓபிஎஸ்
இதனால் அடுத்து என்ன செய்வது? என்ன முடிவெடுப்பது என தெரியாமல் ஓபிஎஸ் குழம்பிப் போயிருக்கிறாராம். ஆனால் எடப்பாடி தரப்போ எப்படியாவது ஓபிஎஸ்ஸை வளைத்துப் போடுவதில் உறுதியாக இருக்கிறதாம்.