இன்று யுகாதி திருநாள் : ரோசையா, ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
சென்னை: இன்று தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதி திருநாள் கொண்டாடப் படுவதை யொட்டி, தமிழக ஆளுநர், முதலமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட பிற அரசியல் தலைவர்கள் மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஒற்றுமையும், நல்லிணக்கமும் நிலவ வேண்டும்...
இது தொடர்பாக தமிழக ஆளுநர் ரோசையா வெளியிட்டுள்ள யுகாதி தின வாழ்த்துச் செய்தியில், ‘நாட்டில் அமைதி, வளர்ச்சி, வளம் காண்பதுடன் அனைவரிடமும் ஒற்றுமையும், நல்லிணக்கமும் நிலவ வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
புதிய முயற்சிகள் வெற்றி பெறட்டும்...
அதேபோல், முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி, உவகையுற வாழந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
பொலிவு சேர வாழ்த்துக்கள்....
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தெலுங்கு மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் நிறைய, பொலிவு சேர வாழ்த்துக்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
சீரும் சிறப்புமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்...
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இந்தப் புத்தாண்டில் மக்கள் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்' எனக் கூறியுள்ளார்.