ஆர்கே.நகரில் ஒரு ஓட்டுக்கு ரூ.5000... 'கேப்டன்' மச்சான் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆர்கே நகரில் ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் வழங்கப்படுவதாக தேமுதிக இளைஞரணி தலைவரான எல்கே.சுதீஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக தேமுதிக இளைஞர் அணி தலைவரும் விஜயகாந்தின் மச்சானுமான எல்கே.சுதீஷ் குற்றம்சாட்டியுள்ளார். ஆர்கே.நகரில் அதிமுகவும் திமுகவும் பணத்தை நம்பிதான் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.
சென்னை ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் சசிகலா தரப்பு அதிமுக சார்பில் சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் கட்சியின் மூத்த தலைவரும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவருமான மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக சார்பில் உள்ளூர் காரரான மருது கணேஷ் களம் இறக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் மதிவாணனும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக தீபாவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தேமுதிக அலுவகலம் திறப்பு
தேமுதிக வேட்பாளரான மதிவாணன் நேற்று கட்சியின் இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கட்சியின் முன்னணி தலைவவர்களுடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்ப்பேட்டை சேனி அம்மன் கோவில் தெருவில் தே.மு.தி.க. தேர்தல் பணிமனை அலுவலகத்தை எல்.கே.சுதீஷ் திறந்து வைத்தார்.

பணத்தை நம்பி போட்டியிடுகிறார்கள்
இதைத்தொடர்ந்து எல்கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, "ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. பணத்தை நம்பி போட்டியிடுகிறது. நாங்கள் மக்களை நம்பி போட்டியிடுகிறோம். ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் பட்டுவாடா செய்வதாக கூறுகிறார்கள்.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்
மக்கள் பணத்தை விரும்பாமல் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே அந்த மாற்றத்தை நாங்கள் அளிப்போம். விஜயகாந்த் தீவிர பிரசாரம் மேற்கொள்வார். ஆர்.கே.நகர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன் மாபெரும் வெற்றி பெறுவார்.

அதிக விளம்பரங்கள் உள்ளன
அ.தி.மு.க.வை விட தி.மு.க. விளம்பரங்கள் தொகுதியில் அதிகம் உள்ளன. இதனை வேடிக்கை பார்க்காமல் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications