சொந்த தொகுதியிலேயே 50,000 பேர் வேலை இழப்பு.. தமிழகத்தை எப்படி நிர்வகிக்க போகிறார் எடப்பாடியார்?
விசைத்தறி நூல் விலை உயர்ந்துள்ளதைக் கண்டித்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் தற்போது வேலையை இழந்துள்ளனர்.
சேலம்: நூல் விலை ரூ.200 வரை உயர்ந்துள்ளதால், விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 4 நாள்களாக போராடி வருவதால் அதன் தொழிலாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையை இழந்துள்ளனர்.
சேலம், திருப்பூர், கோயமுத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு அன்றாடம் கூலிக்கு ஆயிரக்கணக்கிலான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம , எடப்பாடியைச் சுற்றியுள்ள கவுண்டம்பட்டி, மேட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசை தறிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நூல் விலை உயர்வு
இந்நிலையில் நூல் விலை ரூ.200 வரை உயர்ந்துள்ளது. இதனால் துண்டு (டவல்) உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நூல் விலையை குறைக்க வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் 4 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வரிடம் முறையிட்டும்
எடப்பாடியானது முதல்வர் பழனிச்சாமியின் சொந்த தொகுதியாகும். இதனால் விசைத்தறி தொழிலாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று கருதி அவரிடம் விசைத்தறி உரிமையாளர்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
50,000 பேர் இழப்பு
இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தால் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையை இழந்துள்ளனர். இந்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நூல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள், உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவரா தமிழக முதல்வர்?
சொந்த தொகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 4 நாள்களாக போராடி வரும் நிலையில் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் நிலவும் மீனவர்கள் பிரச்சினை, நெடுவாசல் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, நதி நீர் பிரச்சினை உள்ளிட்டவற்றில் அவரால் எவ்வாறு திறம்பட செய்லபட முடியும் என்பதே அரசியல் நோக்காளர்களின் கேள்வியாகும்.