மலைக்கு திரும்பிய கள்ளழகர்: சித்திரை திருவிழா நிறைவு
மதுரை: அழகர்கோவில் மலைக்கு திரும்பி கள்ளழகர் இருப்பிடம் சேர்ந்தார். அவரை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து மலர்தூவி வரவேற்றனர். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவுபெற்றது.
மதுரை அருகேயுள்ள அழகர்கோவிலில் கடந்த 10ம் தேதி சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்றது. இதற்காக கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரை புறப்பட்டார். எதிர்சேவை, வைகை ஆற்றில் எழுந்தருளல், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தது, தசாவதாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன்பின் கோவிலுக்கு கள்ளழகர் புறப்பட்டார்.

17ம்தேதி அதிகாலையில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கள்ளர் திருக்கோலத்தில் பிரியாவிடை பெற்று கருப்பணசாமி கோவில் முன்பிருந்து திருமாலிருஞ்சோலைக்கு அழகர் புறப்பட்டார்.
நேற்றுமுன்தினம், அதிகாலையில் அப்பன்திருப்பதியிலும் மற்ற மண்டபங்களிலும் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் யானை முன்வர அழகரின் பல்லக்கு பின்வர கோவிலுக்கு கள்ளழகர் வந்தார். அங்கு அவரை ஏராளமான பக்தர்கள் வரவேற்றனர்.
அப்போது கோட்டைவாசலில் இருந்து கோவில் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 18ம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு விசேஷ பூஜை நடத்தப்பட்டு தீபராதனையும், வையாழியும் நடந்தது.
கோவில் உள்பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் விதவிதமான வண்ண மலர்களை தூவி அழகரை வரவேற்றனர். 18 பூசணிக்காய்கள் வைத்து அவற்றில் தீபம் ஏற்றி 3 முறை சுற்றி வந்து திருஷ்டி கழிக்கப்பட்டது.
பின்னர் காலை 10.30 மணிக்கு பக்தர்களின் ‘கோவிந்தா' கோஷத்துடன் கள்ளழகர், கோவிலுக்குப் போய் இருப்பிடம் சேர்ந்தார். அங்கு திருமஞ்சனத்திற்கு பிறகு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று, உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. சுவாமி மதுரைக்கு சென்று திரும்பும் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட 21 உண்டியல்கள் வந்து சேர்ந்தன. விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த தானியங்களை கோவிலுக்கு வந்து காணிக்கையாக செலுத்தினர்.
இந்த ஆண்டு 407 மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருளினார். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications