விரக்தியில் பேசுகிறார் மு.க.அழகிரி... லாவணிக் கச்சேரி நடத்தத் தயராக இல்லை என மு.க.ஸ்டாலின் பதில்
சென்னை : அரசியல் பண்பாட்டியிலிருந்து மாறி வார்த்தைக்கு வார்த்தை லாவணிக் கச்சேரியில் இறங்குவதற்கு தான் தயாராக இல்லை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தனி நபர்களின் பேச்சுக்களை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கலாம் என்றும் அதற்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...

அண்மையில் வெளிவந்த தேர்தல் கணிப்பு பற்றியும், அதன் முடிவுகள் குறித்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி போன்ற ஒருசிலர் அளித்துள்ள பேட்டி பற்றியும் என்னுடைய கருத்தினைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் தான் ஆறாவது முறையும் தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டுமென்றும், மது விலக்குப் பிரச்சினையிலே கூட, தலைவர் அவர்கள் தான், வெற்றி பெற்று வந்து முதல் கையெழுத்திடுவார் என்றும் அண்மையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் நான் திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறேன்.
தலைவர் கலைஞர் அவர்கள் தான் தமிழகத்தில் அடுத்த முறை முதல்வர் என்று அழுத்தந்திருத்தமாக தொடர்ந்து சொல்லி வருகிறேன். நானும் ஒரு முதலமைச்சர் வேட்பாளர் என்று நான் எப்போதுமே சொல்லிக் கொண்ட தில்லை. அந்த எண்ணத்தோடு இருந்ததும் இல்லை.
ஆனால் வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்த வேண்டுமென்று சிலர் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படிப்பட்டவர்களின் பேட்டியையோ, கருத்தையோ கழகத்திலே உள்ளவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
தி.மு. கழகத்தை வலுப்படுத்துவதற்காக ஆரோக்கியமான அரசியல் பண்பாட்டைக் கடந்த நாற்பதாண்டு காலமாகப் பின் பற்றி வருபவன் நான். தலைவர் கலைஞர் அவர்களால் அப்படித் தான் வளர்க்கப் பட்டேன். அந்தப் பண்பாட்டிலிருந்து மாறி வார்த்தைக்கு வார்த்தை லாவணிக் கச்சேரியில் இறங்குவதற்கு நான் தயாராக இல்லை. தனி நபர்களின் விரக்திப் பேச்சை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கலாம். அதற்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் தி.மு.கழகத்திற்கும் இல்லை, எனக்கும் இல்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications