அரசுக்கு உத்தரவிடுங்க... கோரிக்கை விடுத்த வக்கீலிடம் நச்சுன்னு 4 கேள்வி கேட்ட நீதிபதிகள்
சென்னை: கன மழை என்பது இயற்கை. இதற்காக கோர்ட்டுக்கு வழக்குத் தொடர வருபவர்கள் ஏரிகள், குளங்கள் போன்றவை ஆக்கிரமிக்கப்படும்போது ஏன் வழக்கு தொடருவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தி்ல தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு மூத்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி ஒரு கோரிக்கை விடுத்தார்.
அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. சென்னையில் அனைத்து பகுதிகளும் மழை வெள்ளத்தில் மிதக்கிறது. மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். எனவே, இதுகுறித்து இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, தகுந்த உத்தரவை தமிழக அரசுக்கு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
ஆனால் இதை உடனடியாக டிஸ்மிஸ் செய்து விட்டனர் நீதிபதிகள். பின்னர் அவர்கள் சரமாரியாக பல கேள்விகளை கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டனர்.
நீதிபதிகள் கூறியவற்றிலிருந்து..
- கனமழை பெய்வது என்பது இயற்கையானது.
- பல பகுதிகளில் சாலைகளிலும், வீட்டுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்துள்ளது. மக்களும் கடுமையாக அவமதிப்படுகின்றனர்.
- இந்த இயற்கை சீற்றத்துக்காக இந்த ஐகோர்ட்டை நாடுபவர்கள், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, சட்டவிரோதமாக கட்டிடங்கள் தொடர்பாக ஏன் இங்கு வருவதில்லை?
- நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது.
- இந்த இயற்கை சீற்றத்தின் வீரியத்தை உணர்ந்த பின்னர், இந்த ஐகோர்ட்டுக்கு வருவதை ஏற்கமுடியாது.
- மக்கள் ஓட்டு போட்டுத்தானே அரசாங்கத்தை தேர்வு செய்கின்றனர்?
- அதேநேரம், தேர்தலில் வாக்குறுதிகளை கொடுக்கும்போது, அதை நிறைவேற்றவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும்.