திருச்சியில் மதிமுகவினர் ரயில் மறியல் - வைகோ உள்பட 500 தொண்டர்கள் கைது #TamilNaduBandh
திருச்சி: திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வைகோ உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் மறியல் போராட்டத்திற்காக பேரணியாக சென்ற வைகோவை ரயில் நிலையம் அருகே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்ட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கடந்த ஒரு வார மாக வன்முறை நடைபெற்றது. இதில், தமிழர்கள் கடுமையாக தாக்கப்பட்டும், அவமானப்படுத் தப்பட்டும் உள்ளனர். தமிழர்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப் பட்டுள்ளன.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இந்த முழு அடைப்புக்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
காலை 6 மணிமுதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம், ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சியில் பேரணியாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற வைகோ உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
தொல். திருமாவளவன் கைது
இதேபோல சென்னையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட நூற்றுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டையில் விருதுநகர் - திருச்சி பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.