தங்கமணி வீட்டிற்கு வந்த அமைச்சர் சி. விஜயபாஸ்கர்... ஆலோசனையில் பங்கேற்பு
அதிமுகவின் இரு அணிகளும் இணையப் போவதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.
சென்னை: அமைச்சர் தங்கமணி வீட்டில் 15க்கும் மேற்பட்ட அமைச்சர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
கடந்த 7ஆம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்ற பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்பான நகர்வுகள் நடந்து வருகின்றன. அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகுவார் என்றும், அவரை ராஜினாமா செய்யச் சொல்லி மூத்த அமைச்சர்கள் வற்புறுத்துவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் டிடிவி தினகரன் அதை மறுத்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலையில் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், கட்சி, ஆட்சி, சின்னத்தைக் காப்பாற்ற ஒற்றுமையுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அமர்ந்து பேசுவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலையில் டுவிட்டரில் செய்தி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நேரடியாகவே அழைப்பு விடுத்தார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து இரண்டு முறை ஆலோசனை நடத்தினார் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை. செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தார். மூத்த அமைச்சர்கள் அமர்ந்து பேசி முடிவெடுப்பார்கள் என்றும் கூறினார் தம்பித்துரை
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை சென்னை வருமாறு தொலைபேசி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் வீட்டில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
அமைச்சர் தங்கமணி வீட்டில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனையில் 15க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் சி. விஜயபாஸ்கரும் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications