திடீர் திடீர்னு திண்டுக்கல்லில் எட்டிப்பார்க்கும் மழை- உழவு மழைக்கும் கூடுதலாக கிடைக்குமா?
திண்டுக்கல்லில் திடீர் திடீரென என சில நிமிடங்கள் மட்டும் மழை அடிக்கடி எட்டிப் பார்த்துவிட்டு போகிறது.
திண்டுக்கல்: சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில் உள்மாவட்டமான திண்டுக்கல்லில் திடீர் திடீரென என சில நிமிடங்கள் மட்டும் மழை அடிக்கடி எட்டிப் பார்த்துவிட்டு போகிறது.
வரலாறு காணாத உச்சகட்ட வறட்சியை சந்தித்தது திண்டுக்கல். தென்னை மரங்கள் காய்ந்து அப்படி கருகிப் போன பேரவலம் திண்டுக்கல் மாவட்டம் எங்கும் இருந்தது.

கடந்த சில ஆண்டுகளாக நீடித்த வறட்சியால் நெல் சாகுபடி என்பதே இப்பகுதியில் காணாமலேயே போய்விட்டது. கடந்த சில மாதங்களை தலைகாட்டி வரும் மழையால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சற்றே ஆறுதலடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை ஓரளவு நிலத்தடி நீரை உயிர்ப்பித்துக் கொடுத்தது. இதனால் நெல், கடலை உள்ளிட்ட சாகுபடி மீண்டும் தலைதூக்கியது திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தில்.
தற்போது வடகிழக்குப் பருவமழை சென்னை உட்பட கடலோர மாவட்டங்களை ரொம்பவே மிரட்டி வருகிறது. உள்மாவட்டங்களில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டத்திலும் அடிக்கடி மழை எட்டிப்பார்த்துச் செல்கிறது. சடசடவென கொட்டி ஓயாமல் நிதானமாக 'சில உழவு மழையேனும் பொழிந்தால்தான்' நிம்மதி என்பது திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் கருத்து.
திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் மழை எவ்வளவு பெய்திருக்கிறது என்றால் ஒரு உழவு மழை; 2 உழவு மழை என விவசாயிகள் தோராயமாக குறிப்பிடுவது வழக்கம்.












Click it and Unblock the Notifications