மோடிக்கு ஓட்டுகள்.. ரஜினிக்கு 'கோச்சடையான்'.. சந்திப்பின் பின்னணி!
சென்னை: சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்துவிட்டுப் போனது பற்றி பாஜகவினர் சிலாகித்துக் கொண்டிருந்தாலும் உண்மை என்ன என்பதை அறிந்தவர்கள் மவுனமாக புன்னகைக்கவே செய்கின்றனர்.
பாரதிய ஜனதா கூட்டணியில் ரஜினி- மோடி சந்திப்பை தலையில் வைத்து கொண்டாடுகிறவர்கள் பாஜக தலைவர்கள் மட்டுமல்ல.. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கூட.. அதற்காக என்றோ ஒருநாள் எடுத்த புகைப்படத்தை போட்டு தேற்றிக் கொண்டுவிட்டார்...
கொந்தளிப்பில் விஜயகாந்த்
ஆனால் அதே கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் இந்த சந்திப்பை இம்மியளவும் ரசிக்கவில்லையாம்.. தெருத்தெருவாக குடும்பத்தோடு பிரசாரம் செய்பவர்கள் நாங்கள்.. ஆனால் ரஜினியை சந்திப்புக்கு அப்படி ஒரு முக்கியத்துவமா என்பது அவர்களது கோபம்.. மேலும் இந்தச் சந்திப்பு குறித்த விவரத்தை விஜய்காந்துக்கு பாஜக தரப்பு தெரிவிக்கவே இல்லையாம். மீடியா மூலமே தெரிய வர, பிரச்சாரத்தையே ரத்து செய்துவிட்டார்.
எங்களுக்கு தெரியாதா?
அதுமட்டும்தானா விஜயகாந்தின் கோபம் என்றால் இல்லை.... சினிமாகாரரான விஜயகாந்துக்கு சீனியர் ரஜினியின் தொழில் சூட்சுமம் தெரியாமலும் இல்லைதான்.. ஏனெனில் ரஜினியின் ஒவ்வொரு திரைப்படம் வரும்போதும் எப்படியேனும் ஊடகப் பார்வையில் இருக்க வேண்டும் என்பதில் அத்தனை வித்தைகளையும் அரங்கேற்றுபவர் ரஜினி என்பது அரசியலையும் சினிமாவையும் அறிந்தவர்களுக்கு தெரிந்த கதை..
விளம்பரத்துக்காக.
அதனால்தான் ரஜினி தமது கோச்சடையானுக்கான விளம்பரமாகத்தான் மோடியுடன் சந்திப்புக்கு ஒப்புக் கொண்டாரே தவிர.. இந்த சந்திப்பாலோ அல்லது அவராலோ அப்படி என்ன ஓட்டு கிடைத்துவிடும் என்றும் குமுறுகிறாராம் கேப்டன்.
ஊர் ஊரா ரஜினி வருவாரா?
அப்படி ரஜினிதான் உங்களுக்கு எல்லாமும் எனில் கட்சியில் சேர்த்துக் கொண்டு எங்களை மாதிரி வீதி வீதியா அழைத்து வந்து பிரசாரம் செய்ய வேண்டியதுதானே என்றும் எகிறுகிறாராம் கேப்டன்.
கோச்சடையானுக்காக ஊடக வெளிச்சம்
ரஜினியின் பெயரிலேயே பாலிவுட்டில் ஒரு படம் தயாராக்கிற அளவுக்கு அவருக்கான ஈர்ப்பு இருக்கிறது. ரஜினியின் கோச்சடையான் இப்போது நாடு முழுவதும் இப்போது வெளியாகும் நிலையில் தேசிய ஊடகங்களிலும் தாம் ஊடக வெளிச்சத்தில் இருந்தாக வேண்டும் என்பது ரஜினியின் கணக்காக சொல்லப்படுகிறது.
மோடிக்கும் கணக்கு இருக்கிறதே....
இதனால்தான் ரஜினி, மோடியை சந்திக்க ஒப்புக் கொண்டார் என்று கூறப்படும் நிலையில் மோடிக்கும் சில கணக்குகள் இல்லாமல் இல்லை.. ரஜினியின் சொந்த ஊர் கர்நாடகம் என்பதும், பூர்வீகம் மகராஷ்டிரா என்பதும் மறைந்த பால்தாக்கரேவை கடவுளுடன் ஒப்பிட்டுப் பேசியவர் ரஜினி என்பதும் குறிப்பிடத்தக்கது.
"பரஸ்பரம் நல விரும்பிகள்"
அதனால்தான் சென்னைக்கு வருவதற்கு முன்பு கர்நாடகாவில் பேசிய மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்கப் போகிறேன் என்று பலத்த கரவொலிக்கு இடையே அறிவித்தார்.
இப்படி கர்நாடகா, மகாராஷ்டிராவில் ரஜினியுடனான நெருக்கம் மோடிக்கு உதவும். அதாவது ரஜினிக்கு கோச்சடையான் எப்படியோ அதுபோல்.. மோடிக்கும் ஒரு கணக்கு...
அதனால்தான் ரஜினிகாந்த் தெள்ளத் தெளிவாக "பரஸ்பரம் நல விரும்பிகள்" என்று சொன்னாரோ?