சுனாமி பேரழிவின் 10-ம் ஆண்டு நினைவு தினம்: நாகையில் மணல் சிற்பங்கள் அமைத்து அஞ்சலி
நாகை: சுனாமி பேரழிவின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாகை கடற்கரை யில் மணல் சிற்பங்கள் அமைத்து பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி உலகையே அதிர வைத்த தினம். ஆம் , கோர தாண்டவமாடிய ஆழிப்பேரலை, பல்லாயிரக்கணக்கான உயர்களை குடித்த தினம் அது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நிலைக்குலையத் செய்த ஆழிப்பேரலைகள் ஏற்படுத்திய தாக்கம் என்றும் தணியாதது.

தமிழகத்தில் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டப் பகுதி நாகப்பட்டினமே. நாகையில் மட்டும் 6 ஆயிரத்தக்கும் அதிகமானோர் சுனாமியால் பலியாகினர். குழந்தைகளை இழந்த பெற்றோர், பெற்றோர்களை இழந்த குழந்தைகள், குடும்பம், சொத்து என அனைத்தையும் இழந்தவர்கள் என ஆழிப்பேரலை நடத்திய கோர தாண்டவத்தினால், பாதிக்கப்பட்டவர்கள் அதன் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தவித்து வருகின்றனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை தத்தெடுத்த பல தொண்டு நிறுவனங்கள், அவர்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சுனாமி பேரழிவின் 10ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுகள் பத்து கடந்து விட்டாலும், அதன் சுவடுகள் இன்னும் நீங்கியபாடிவில்லை. இருப்பினும் சுனாமி ஏற்படுத்திய மரட்சியில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ள சிலர், நாகை புதுக்கடற்கரையில் மணல் சிற்பங்களை அமைத்து, அதற்கு பல வண்ணங்களைப் பூசி மறைந்த தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலத்தினர். 30 அடி நீளமுள்ள கேன்வாஸில் பல வண்ண ஓவியங்களை தீட்டி, தங்கள் நினைவலைகளை அவர்கள் பதிவு செய்தனர்.
சுனாமியின் போது நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன், பாதிக்கப்பட்டவர்கள் அமைத்திருந்த மணல் சிற்பங்களையும், ஓவியங்களையும் பார்வையில், மனவலிமை பெற்றுள்ள அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இப்படி ஒரு கோர நிகழ்வு உலகின் எந்த ஒரு மூலையிலும் மீண்டும் நடக்கக் கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் இறைவனை பிரார்தித்தனர். ஆழிப்பேரலையின் ஆக்ரோஷம் தணிந்தே இருக்கட்டும் என்பது அவர்களின் வேண்டுதலாக உள்ளது.












Click it and Unblock the Notifications