”வேடந்தாங்கல்” சரணாலயத்துக்கு புதிய போட்டி – பாச்சல் ஏரிக்குப் பாய்ந்து வரும் பறவைகள்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பாச்சல் ஏரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பறவைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளதால் பாச்சல் ஏரி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போலக் காட்சியளிக்கிறது.
பறவைகளைக் காண சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களும், குழந்தைகளும் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று பாச்சல் ஏரி. இந்த ஏரியில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால் பறவைகள் புகலிடமாக மாறியுள்ளது.

குவியும் பறவைகள்:
இதனால் நீண்ட மூக்குடன் கூடிய வெள்ளை நிற நாரை, கொக்கு போன்ற பறவைகள் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் இங்கு வருவதால் பார்ப்போர் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் சுற்றுலாத் தளம் போல் மாறியுள்ளது.

இரை தேடிப் பயணம்:
தற்போது சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பசுமையாகக் காட்சியளிப்பதாலும், கோழிப் பண்ணைக் கழிவுகளில் பறவைகளுக்குத் தேவையான இரை கிடைக்கும் அளவுக்கு உகந்த பகுதியாக இருப்பதாலும் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர் அப் பகுதியினர்.

மகிழ்ச்சியில் மக்கள்:
பகல் நேரங்களில் இரைதேடச் செல்லும் பறவைகள் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இங்குள்ள ஏரிக்குத் திரும்புவது அனைவரும் பார்த்து மகிழும் காட்சியாக உள்ளது.

கருவேல மர வீடு:
மாலை வேளைகளில் ஏரியில் உள்ள கருவேல மரங்களில் தங்கியுள்ள பறவைகள் கூட்டம் காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

குழந்தைகளுடன் குதூகலம்:
அண்டை மாநிலங்களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கூட்டம், கூட்டமாக இடம்பெயர்ந்து வரும் இந்த பறவைகளைக் காண சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications