திமுகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது.. ஜி.கே.வாசன் உறுதி!
சென்னை: தேர்தல் வெற்றிக்காக ஒருபோதும் திமுக கூட்டணியில் இணைய மாட்டோம் என்று தமாகா கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி ஆலோசனை கூட்டம் தேனாம்பேட்டையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் பிரதிநிதிகள் 50 பேருடன் ஜி.கே.வாசன் கலந்துரையாடினார்.
நாங்க வீக்கு:
சட்டமன்ற தேர்தலில் மாணவர்களின் பங்கு குறித்து அவர் ஆலோசித்தார். பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘'வருகிற சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் அளவுக்கு த.மா.கா.வுக்கு பலம் இல்லை. மக்கள் விரும்பும் கூட்டணியில் த.மா.கா இடம் பெறும்.
தி.மு.க.வுடன் சேராது:
தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து இருப்பதால் அந்த கூட்டணியில் த.மா.கா சேராது. தமிழ் மாநில காங்கிரசின் தனித்தன்மையை இழக்க மாட்டோம். காங்கிரசில் இருந்து 75 சதவீத தொண்டர்கள், நிர்வாகிகளால் தொடங்கப்பட்டது தான் த.மா.கா. ஒருபோதும் அந்த கூட்டணியில் இணைய மாட்டோம்.
கூட்டணி அறிவிப்பு:
டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு த.மா.கா. ஆதரவு தெரிவித்து கொள்கிறது. மார்ச் 2-வது வாரத்தில் கூட்டணி தொடர்பாக த.மா.கா. அறிவிப்பு வெளியாகும். நகைக்கடை உரிமையாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். 1 சதவீத கலால் வரியை ரத்து செய்ய வேண்டும்.
7 தமிழர் விடுதலை:
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை குறித்து சட்ட நுணுக்கங்களை ஆராய வேண்டும். நீதிமன்ற வழி காட்டுதலின் பேரில் மத்திய அரசு நடந்து வருகிறது'' என்று பேசியுள்ளார்.