தமிழகத்தில் எந்த தேசிய கட்சியும் காலூன்ற முடியாது... தம்பிதுரை சொன்னதை கேட்டீங்களா?
தமிழகத்தில் தேசிய கட்சிகள் எதுவும் காலூன்ற முடியாது என்று தம்பிதுரை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் காங்கிரஸ் உட்பட எந்த தேசிய கட்சியும் காலூன்ற முடியாது என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை திருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தெரிவித்தார்.
ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவு, பகல் கனவாகவே இருக்கும் என்றும் 1967 க்கு பிறகு திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆட்சி புரிகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தாமரையை மலரவைக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் பாஜகவிற்கு எச்சரிக்கை விடும் வகையிலேயே பேசியுள்ளார் தம்பிதுரை.
கனவு காணும் காங்கிரஸ்
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம் என்று கடந்த 30 ஆண்டுகளாகவே அதாவது எம்ஜிஆர் மரணமடைந்ததிலிருந்தே காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர். ஜி.கே. மூப்பனார் தொடங்கி திருநாவுக்கரசர் வரை காமராஜர் ஆட்சிக்காக கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.
தாமரை மலரும்
தமிழகத்தில் தாமரை மலரும் என்றும், சென்னை ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர். இதற்கு ஒரு படி மேலே போன தமிழிசை, தமிழகத்தில் பாஜகவின் ஆட்சியை அமைக்காமல் உயிர் போகாது என்று கூறியுள்ளார்.
தம்பிதுரை பேச்சு
இந்த பேட்டிகளுக்கு பதிலடி தரும் விதமாக பேசியுள்ள அதிமுக எம்பியும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ், பாஜகவிற்கு நெத்தியடி
அதிமுக ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவு, பகல் கனவாகவே இருக்கும் என்று கூறிய அவர், 1967 க்கு பிறகு திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆட்சி புரிகின்றன என்றும் தெரிவித்தார். பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு நெத்தியடியாக பதில் அளித்துள்ளார் தம்பிதுரை.