மத்திய அரசின் கிடுக்கிப்பிடி.. சின்ன வெங்காயம் விலை குறைந்தது!
நெல்லை: வெங்காய விலையைக் குறைக்கவும், பதுக்கலைத் தடுக்கவும் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளதன் விளைவாக, தற்போது தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இரண்டையும் வாங்க முடியாத அளவுக்கு விலை கடுமையாக இருந்து வந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து மத்திய அரசு சுதாரித்துக் கொண்டு சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
மழை பொய்த்ததால்
பருவ மழை சரியாக பெய்யாததால் தமிழகத்தில் விவசாயம் படுத்து வி்ட்டது. கடந்த ஆண்டு வெங்காயத்தின் விலை ரூ.120 வரை விற்கப்பட்டது. இதனால் விலையை கட்டுப்படுத்த கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.
ஏற்றுமதிக்குத் தடை
இதனால் அனைத்து சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் சின்ன வெங்காயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டனர். இதனால் வெங்காயத்தின் விலை கட்டுபாட்டுக்குள் வந்தது.
இறங்குமுகத்தில் விலை
ரூ.30, ரூ.20 என கட்டுக்குள் வந்த வெங்காயத்தின் விலை திடீரென கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருக்கிறது. மார்க்கெட்டில் உள்ள மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகளிடம் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கூவிக் கூவி விற்ற வியாபாரி
இந்நிலையில் பாவூர்சத்திரம் பகுதியில் விளைந்த வெங்காயத்தை இடைத்தரகர்களிடம் கொடுக்க மனமில்லாத விவசாயி ஒருவர் வெங்காயத்தை மூட்டையாக கட்டி எடுத்த வந்து நெல்லை வீதிகளில் கிலோ ரூ.20க்கு கூவி கூவி விற்பனை செய்து வருகிறார்.
தரகர்களால் நஷ்டம்தான்
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், வெங்காயத்தை பதுக்கி வைக்க கூடாது என சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. இடை தரகர்கள் மூலம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லலாம். ஆனால் எங்களுககு காசு முழுமையாக வந்து சேராது. லாபமும் இருக்காது. இதனால் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை நானே கொண்டு வந்து நெல்லை தெருக்களில் வியாபாரம் செய்கிறேன். சின்ன வெங்காயத்தை மற்ற இடங்களை விட விலை குறைவாக கொடுக்கிறேன. ஆனாலும் எனக்கு நஷ்டம் இல்லை என்று தெரிவிக்கிறார்.