தொண்டர்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே உள்ளது - சசிகலா புஷ்பா
ஒ.பன்னீர் செல்வத்திற்குத்தான் தொண்டர்களின் ஆதரவு உள்ளது என்று ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
டெல்லி: தமிழக முதல்வராக இருப்பதற்கு மக்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்திற்குத்தான் இருக்கிறது என்று ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு தினங்களாக ஓ.பன்னீர் செல்வம் போயஸ்கார்டன் செல்லவில்லை. இதுவே ஒருவித கேள்வியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இரண்டு நாட்களாக மவுனமாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது தெரியாமல் இருந்த நிலையில் திடீரென இரவு 9 மணியளவில் மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீரென கண்ணை மூடி அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.
அரைமணி நேர தியானத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேசிய ஓ.பன்னீர் செல்வம், தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், ராஜினாமா செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறினார் ஓ. பன்னீர் செல்வம்.
ஓ. பன்னீர் செல்வத்தின் கருத்து தமிழகம் அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் பேட்டி பற்றி கருத்து கூறிய ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா, தொண்டர்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்திற்குதான் உள்ளது என்றார். சசிகலா முதல்வராவதற்கு மக்களின் ஆதரவு கிடையாது என்றும் தெரிவித்தார்.