இனிமேலாவது விடிவு காலம் பிறக்குமா சென்னை விமான நிலையத்துக்கு?
சென்னை: சென்னை விமான நிலைய மேற்கூரையின் தொடர் இடிபாடுகள் குறித்து இதுவரை யாருமே கண்டு கொள்ளவி்லை. மக்கள்தான் தினசரி உயிரைப் பணயம் வைத்து புலம்பியபடி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்போது முல் முறையாக ஒரு கட்சி இதற்காகப் போராட முன்வந்துள்ளது. ஆனால் மற்ற கட்சிகளோ இதனால் எந்த லாபமும் இல்லை என்று நினைத்து விட்டனரோ என்னவோ, வாய் திறக்காமல் உள்ளனர். ஆனால் மற்ற கட்சிகளும் சேர்ந்து இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டால்தான் இதற்கு நிவாரணம் கிடைக்கும்.
சென்னை விமான நிலையத்தையும், அதைப் பயன்படுத்துவோரையும், பயணிகளையும், தமிழக மக்களையும் மத்திய விமான போக்குவரத்துத் துறை மதிக்கவில்லை என்றுதான் இதை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
காரணம், தினசரி மேற்கூரையின் ஒரு பகுதி விழுந்தபடி உள்ளது. யாருமே இதை சட்ட செய்யவி்லை என்பதுதான்.
அமைதி ஏன்:
எது எதற்கோ போராடும் கட்சிகள் ஏன் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கின்றன என்பது தெரியவில்லை. தற்போது இதற்காக போராட்டம் நடத்தவுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி போல பிற கட்சிகளம் இணைந்து செயல்பட்டால்தான் இந்தப் பிரச்சினையை சரி செய்ய உரியவர்கள் முயல்வார்கள்.
பொன்விழாவை நோக்கி:
வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், "சென்னை விமான நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டுமானத்தின் மேற்கூரைகள் அன்றாடம் இடிந்து விழுவதும், பொன்விழாவை நோக்கி மேற்கூரை இடிந்து விழுகின்றது என்று ஊடகங்கள் ஏகடியம் செய்வதும் தொடர்கிற போதும் மத்திய அரசு இது குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தொடரும் செய்திகள்:
சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.. இந்த விமான நிலையத்தின் மேற்கூரைகளும் கட்டுமானப் பணிகளும் இடிந்து விழுந்து பயணிகள் படுகாயமடைவது என்பது தொடர் செய்தியாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசும் விமானப் போக்குவரத்துத் துறையும் இதுபற்றி கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமலே இருக்கிறது.
புரட்டிப் போட்ட நிலநடுக்கம்:
நேபாளத்தை புரட்டிப் போட்ட நிலநடுக்கத்தின் போதுகூட அந்நாட்டின் காத்மண்ட் விமான நிலையம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை; அந்த விமான நிலையத்தை பயன்படுத்தியே இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
எந்த பாதிப்பும் இல்லை:
நேபாளத்து எல்லையில் இருக்கிற மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் பாதிப்பு ஏற்பட்ட போதும் அதன் அருகே உள்ள பக்டோரா விமான நிலையம் பாதிப்புக்குள்ளானதாக செய்திகள் வெளியாகவில்லை.
பலமுறை இடிபாடு:
ஆனால் நிலநடுக்கம் உட்பட எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமலேயே சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை உள்ளிட்ட கட்டுமானங்கள் இதுவரை 45 முறை இடிந்து விழுந்து இருக்கின்றன.. பயணிகளை படுகாயப்படுத்தி இருக்கிறது..
கண்டுகொள்ளாத அரசு:
இத்தனை முறை பாதிப்பு ஏற்பட்டும் மத்திய அரசும் அதன் விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் கண்டும் காணாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தின் விமான நிலையமும் இப்படி மோசமாக கட்டப்பட்டதில்லை.
மோசமான நிகழ்வுகள்:
நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களின் குஜராத் மாநிலத்தின் பூஜ் பிரதேசம் நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி. நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இடம். அங்கு கூட இப்படி ஒரு மோசமான நிகழ்வுகள் நடந்ததாக செய்திகள் இல்லை.
ஏன் நடவடிக்கை இல்லை:
ஆனால் சென்னை விமான நிலையம் மட்டும்தான் இத்தகைய மோசமான நிலையில் இருக்கிறது. இதுவரை 45 முறை இடிந்து விழுந்தும் கூட அதனை சீரமைக்க ஒரு நடவடிக்கை கூட மேற்கொள்ளப்படவில்லை. இந்த விமான நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்ட நிறுவனம் மீது ஒரு சிறு நடவடிக்கையும் இல்லை.
முதலீடுகள் போதுமா:
'மேக் இன் இந்தியா' என்ற பெயரில் சர்வதேச நாடுகளின் முதலீடுகளையெல்லாம் இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்று தம்பட்டம் அடிக்கிற மத்திய அரசு, தென்னிந்தியாவின் முதன்மையான சென்னை விமான நிலையம் நாள்தோறும் இடிந்து விழுந்து கொண்டிருப்பதை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?
அடிப்படைக் கட்டமைப்புகள்:
தமிழர்களின் வாழ்வுரிமை பிரச்சனையில்தான் கேளா காதாக இருக்கும் மத்திய அரசு இதுபோன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் கூட அக்கறையற்று இருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மே 11ல் ஆர்ப்பாட்டம்:
ஆகையால் சென்னை விமான நிலையத்தை உடனே சீரமைக்க வேண்டும்; சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை உள்ளிட்ட கட்டுமானங்கள் 45 முறை இடிந்து விழுவதற்கு காரணமாக இருந்த நிறுவனம் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வதுடன் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை விமான நிலையம் முன்பாக வரும் மே 11 ஆம்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்த இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
எழ வைக்குமா:
இந்தப் போராட்டம் மற்றவர்களை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வைக்கிறதா என்று பார்ப்போம்