கிளாஸ்ரூமில் எப்பப் பார்த்தாலும் செல்போனில் பேச்சு- ஆசிரியைக்கு எதிராக பெற்றோர் போராட்டம்!
ஈரோடு: ஈரோட்டில் வகுப்பறையில் எந்த நேரமும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த டீச்சரை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கூகலூர் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட தாழக்கொம்பு புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 141 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியை கவிதா என்பவரின் தலைமையில் ஆறு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இவர்களில் நித்யா என்ற இடைநிலை ஆசிரியை பள்ளிக்கு தாமதமாக வருவதாகவும், வகுப்பறையில் எந்த நேரமும் தான் வைத்துள்ள இரு மொபைல் போனில் யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். இதனால் அவர் சரியாக பாடம் நடத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இது தவிர அதிகமாக இவர் அடிக்கடி விடுப்பில் செல்வதாக கூறி பேற்றோர் தரப்பில் ஏ.இ.ஓ முதல் கலெக்டர் வரை சமீபத்தில் புகார் செய்திருந்தனர். அப்புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் வழக்கம் போலவே தாமதப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆசிரியை நித்யாவை இடமாற்றம் செய்ய கோரி பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பள்ளி முன்னர் நேற்று காலை 8.45 மணிக்கு குவிந்தனர். பள்ளி முற்றுகையை அறிந்த கோபி ஏ.இ.ஓ அர்ஜூன், மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் நாகலட்சுமி, பிரபுதாஸ், பழனிசாமி அடங்கிய குழுவினர் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆசிரியை பிரச்னை குறித்து தொடக்க கல்வி அலுவலரின் கவனத்துக்கு கொண்டுசென்று அவர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.இ.ஓ அர்ஜூன் தெரிவித்தார். பின்னர் பெற்றோரும், பொதுமக்களும் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications