மே 14 முதல் இனி சண்டே எங்களுக்கும் லீவு.. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அதிரடி!
ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் செயல்படாது என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற மே மாதம் 14-ந் தேதி முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை என பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் எரிபொருள்களின் கமிஷன் தொகையை அதிகரிக்காவிட்டால் மே 14-ம் தேதிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசுக்கு இந்திய பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், மே 14ந் தேதி முதல் ஞாயிறு தோறும் விடுமுறை அளிக்கப்படும் என்று பெட்ரோல் விற்பனையாளர் கூட்டமைப்பு சென்னையில் இன்று அறிவித்துள்ளது.
தங்களின் வேலைநேர பட்டியலையும் பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி வாரநாட்களில் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்குகள் இயங்கும் என்றும் இது மே 15 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 12 மணி வரை 24 மணி நேரம் பெட்ரோல் நிலையங்கள் இனி இயங்காது. தமிழகம், புதுச்சேரி தவிர கர்நாடகா, கேரளா, ஆந்திராவிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 4,850 பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.