சென்னை மெரினா கடற்கரையில் 3-வது நாளாக போலீஸ் குவிப்பு.. பீச்சுக்கு வருபவர்களிடம் கெடுபிடி
சென்னை மெரினா கடற்கரையில் மூன்றாவது நாளாக இன்றும் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மெரினா கடற்கரையில் போலீசாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி மாணவர்கள் நேற்று கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 17வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
நேற்று கடலில் இறங்கி..
ஆனால் போலீசாரின் பாதுகாப்பையும் மீறி நேற்று 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியலும்..
இதைத்தொடர்ந்து விவகானந்தர் இல்லம் அருகிலேயும் இளைஞர்கள் போலீசாரின் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
3வது நாளாக குவிப்பு
இந்நிலையில் இன்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தலாம் என தகவல் வெளியானதால் மூன்றாவது நாளாக மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசார் கெடுபிடி
மெரினா கடற்கரை பகுதிக்கு செல்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்களிடம் கெடுபிடி காட்டுவதாக கூறப்படுகிறது.