கூடங்குளம்: அணுமின்நிலையத்தில் இன்னும் ஒரு வாரத்தில் மின் உற்பத்தி?
கூடங்குளம்: கூடங்குளத்தில் இன்னும் ஒருவாரத்தில் மின்சார உற்பத்தி தொடங்கும் என்று இந்திய அணுசக்தி கழக மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அணுஉலைகளுக்கு எதிராக கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களும் மீனவர் அமைப்பினரும் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
பல்வேறு தடைகளையும் கடந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணுஉலையில் இருந்து மின் உற்பத்தி விரைவில் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய அணுசக்தி கழக மூத்த அதிகாரி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் அணு உலையானது இந்த ஆண்டு ஜூலை 14-ந் தேதி சோதனை அடிப்படையில் 400 மெகாவாட் மின்சார உற்பத்தியை தயாரிக்கும் நிலையை எட்டி உள்ளது.
முதல் அணு உலையில் இருந்து இன்னும் ஒருவாரத்தில் மின்சார உற்பத்தி தொடங்கும். இதில் இருந்து பெறப்படும் 1000 மெகாவாட் மின்சாரம் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 தென்மாநிலங்களின் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையும்.
2வது அணு உலை
கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2-வது அணு உலையானது அடுத்த ஆண்டு (2014) மத்தியில் முழு அளவில் தனது மின்சார உற்பத்தியை செயல்படத்தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். கூடங்குளத்தில் 2 அணு உலைகளில் இருந்தும் பெறப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தென் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இதன் மூலம் அம்மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறை ஓரளவுக்கு சீரடையும் என எதிர்பார்க்கிறோம்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் இருந்து கர்நாடகத்துக்கு 442 மெகாவாட்டும், கேரளாவுக்கு 266 மெகாவாட்டும், புதுச்சேரிக்கு 67 மெகாவாட்டும் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.