தென் மாவட்டங்களுக்கு தாம்பரம் வழியா கார்ல போக வேண்டாமே... போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்!
சென்னை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சொந்த ஊருக்கு பயணம் செய்பவர்கள் தாம்பரம் வழியாக செல்ல வேண்டாம் எனவும், 3 வேறு வழித்தடங்களை பரிந்துரைத்து அதைப் பயன்படுத்துமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கார்களில் செல்பவர்களில் பெரும்பாலானோர் தாம்பரம்-பெருங்களத்தூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையிலேயே செல்வார்கள். இந்த சாலை வழியாகத்தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள் ஆகியவையும் செல்லும்.

அதிலும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் 2 நாட்களுக்கு முன்னதாகவே தங்களது சொந்த கார்களில் ஊருக்கு செல்ல பலர் விரும்புகிறார்கள்.
போக்குவரத்து நெரிசல்:
இது போன்ற நேரங்களில் வழக்கத்தை விட கூடுதல் பஸ்களும் இயக்கப்படும். இதனால் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
கடுமையான சிரமம்:
அந்த சாலையில் அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், கார்கள் என அனைத்தும் அணி வகுப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் கடுமையான சிரமத்துக்குள்ளாவார்கள்.
தாம்பரம் வழியாக செல்ல வேண்டாம்:
இதனை கருத்தில் கொண்டு தென் மாவட்டங்களுக்கு கார் மற்றும் தனியார் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தாம்பரம் வழியாக ஜி.எஸ்.டி. சாலையில் செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வாகனங்களில் பயணம்:
இது தொடர்பாக பொதுமக்களுக்கு அவர்கள் ஏற்கனவே இருக்கும் மாற்று வழிகளையும் அடையாளம் காட்டியுள்ளனர். போக்குவரத்து மாற்றம் பற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வாகனங்களில் பயணிப்பார்கள்.
திருச்சி நெடுஞ்சாலையை அடையலாம்:
இதனால் ஜி.எஸ்.டி சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக வாய்ப்பிருக்கிறது. எனவே இன்று முதல் தனியார் வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து கீழ்கண்ட சாலைகள் வழியாகவும் செங்கல்பட்டு திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம். ராஜீவ் காந்தி சாலை வழியாக துரைப்பாக்கம், கேளம்பாக்கம், திருக்கழுக்குன்றம் பைபாஸ் வழியாக செங்கல்பட்டு திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம்.
வெவ்வேறு வழிகள்:
கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று அக்கரை, முட்டுக்காடு, கோவளம், மகாபலிபுரம் பைபாஸ், கருங்குழி, திருக்கழுக்குன்றம் பைபாஸ் வழியாகவும் செங்கல்பட்டு திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம்.
மூன்றாவதாக இந்த வழி:
பூந்தமல்லி சாலை வழியாக மதுரவாயல் சந்திப்பு, வேலப்பன் சாவடி, சவிதா பல் மருத்துவக்கல்லூரி, பூந்தமல்லி டெலிபோன் எக்சேன்ஞ் வழியாக நசரத் பேட்டை சென்று பூந்தமல்லி பைபாஸ் சாலையிலிருந்து புதிதாக போடப்பட்டுள்ள 400 அடி வெளிப்புறச்சாலை வழியாக நேராக வண்டலூர் அருகில் ஜி.எஸ்.டி சாலையை அடைந்து சென்னை-திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications