கும்பகோணம் மகாமகம்: குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்... உச்சக்கட்ட பாதுகாப்பு
கும்பகோணம்: கும்பகோணம் மகாமகம் பெருவிழாவை முன்னிட்டு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமகம் குளத்தில் புனித நீராடி வருகின்றன. 4ம் நாளான நேற்று ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் இருந்து 63 நாயன்மார்களின் இரட்டை வீதி உலா நடைபெற்றது. மகாமகம் குளத்தில் கடந்த 4 நாட்களில் 6 லட்சம் பக்தர்கள் நீராடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கும்பகோணம் மகாமகம் திருவிழா கடந்த 13ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் சைவ கோவில்களிலும், மறுநாள் வைணவ கோவில்களிலும் கொடியேற்றப்பட்டது. முதல்நாளில் ஆதீனங்கள், மடாதிபதிகள் என்று அனைவரும் புனித நீராடினர். அன்றைய தினம் 1 லட்சம் பக்தர்கள் மகாமகம் குளத்தில் இறங்கி புனித நீராடினர்.
கடந்த 3 நாட்கள் இருந்த கூட்டத்தை விட 4ம் நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. கடந்த 4 நாட்களில் 6லட்சம் பக்தர்கள் மகாமகம் குளத்தில் இறங்கி புனித நீராடியுள்ளனர். மகாமகம் விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி 22ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் 40 லட்சம் பக்தர்கள் வரை கும்பகோணத்திற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
63 நாயன்மார்கள் ஊர்வலம்
மகாமகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள 12 சைவ கோயில்களிலும் 5 வைணவ கோயில்களிலும் ஒரே நேரத்தில் திருவிழா நடந்து வருவதால் கும்பகோணம் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. 4ம் நாளான நேற்று அறுபத்து மூவர் வீதியுலா காலை நடைபெற்றது. சுவாமி, அம்பாள் நூதன கண்ணாடி பல்லக்கில் ஏகாசனமாக எழுந்தருளியும், 63 நாயன்மார்கள் மஞ்சங்களிலும் எழுந்தருளி இரட்டை வீதிகளில் வீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேகாலயா ஆளுநர்
கும்பகோணத்திற்கு வந்துள்ள மேகாலயா மாநில ஆளுநர் சண்முகநாதன் நேற்று மகாமக குளத்திற்கு வந்தார். கிழக்கு கரை வழியாக மகாமக குளத்திற்குள் இறங்கிய அவர் சூரிய நமஸ்காரம் செய்ததுடன், தீர்த்தத்தையும் கையில் எடுத்து தலையில் தெளித்துக்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய தேசியம் என்பது பண்பாடுகளை கொண்டது. அதன் அடிப்படையில் தான் கும்பமேளா, மகாமகம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன என்றார்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
இந்த விழாக்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் சந்திக்க முடியும். மற்றொன்று புனித நீராடல் மூலம் பண்பாட்டு எண்ணங்களை புதுப்பித்துக்கொள்ள முடிகிறது.
இந்த விழாவைப்போல் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் புஸ்கர் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஒரே குடும்பம்
புனித நீராடல் என்பது இந்தியாவின் தொன்மையான பண்பாடு ஆகும். புனித நீராடும் மக்களிடம் சாதி வேறுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்ற வித்தியாசம் இல்லை. மகாமகத்தில் நீராடுவது என்பது வேறுபாடுகளை மறக்க செய்கிறது. மகாமகம் மக்களை ஒரே குடும்பமாக்குகிறது. சமூக வேறுபாடுகளை களைகிறது. அதனால் தான் நான் நேரடியாக இங்கு வந்தேன் என்று கூறினார்.
சீனா சுற்றுலா பயணிகள்
சீனா நாட்டில் இருந்து 50 சுற்றுலா பயணிகள் கடந்த 3 நாட்களாக கும்பகோணம், தஞ்சை ஆகிய இடங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். கும்பகோணம் மகாமகம் குளத்திற்கு வந்த அவர்கள் மகாமகம் குளத்தை சுற்றி அனைத்து கரைகளையும் கேமரா மூலம் படம் எடுத்தனர்.
புனித நீர்
இந்தியாவில் கோயில்கள் அதிகம் உள்ளன. மேலும் நீர்நிலைகளை புனிதமாக கருதி அதை வழிபாடு செய்வதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. குறிப்பாக கும்பகோணத்தை சுற்றி பார்த்த வகையில் நிறைய குளங்கள் உள்ளன. அதை பராமரித்து வருவதும் எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. நீரை புனிதமாக கருதி அதில் நீராட பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வருவது பெருமையாக உள்ளது என்று சீன பயணிகள் தெரிவித்துள்ளனர்.
உச்சக்கட்ட பாதுகாப்பு
மகாமகம் திருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கும்பகோணத்தில் குவிகின்றனர். இதனால் கும்பகோணம் நகரம் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
வீடுகளில் கணக்கெடுப்பு
மகாமகத்தின் உச்சகட்ட விழா 20ம் தேரோட்டத்தில் இருந்து துவங்கும். அன்று முதல் 22ம் தேதி வரை பல லட்சம் பக்தர்கள் குடந்தைக்கு வருவார்கள் என்பதால் மகாமக குளத்தை சுற்றிலும் வசிக்கும் குடும்பத்தினர் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இதுபோல குளத்தை சுற்றி வசிப்பவர்களின் கார், டூவீலர் போன்ற வாகனங்கள் விவரத்தையும் அதன் பதிவு எண்களையும் போலீசார் பதிவு செய்கிறார்கள்.
30 ஆயிரம் போலீசார்
பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 10,000 போலீசார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தனர். இரண்டாம் கட்டமாக 19,000 போலீசார் நேற்று வந்தனர். இவர்களை தவிர ரயில்வே இருப்பு பாதை பிரிவு போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார், ஊர்க்காவல் படையினர், என்எஸ்எஸ் மற்றும் என்சிசி ஆசிரியர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.