சொத்துக்காக சித்தி கொலை- தனது பெயரில்தான் சொத்து உள்ளது தெரியாமல் அக்கா மகன் வெறிச்செயல்
சென்னை: சென்னையில் பிரபல, பெண் மனோதத்துவ நிபுணர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது அக்காள் மகன் கைது செய்யப்பட்டார். கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சென்னை, எழும்பூர், எத்திராஜ் சாலையில் உள்ள டேங்கி 8 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் எம்மா (82). இவர் மனோதத்துவ நிபுணர். திருமணம் ஆகாமல் தனியாக வாழ்ந்துவந்தார்.
கழுத்தை நெரித்து கொலை
இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த மாதம் 13ம் தேதி அன்று, படுகொலை செய்யப்பட்ட நிலையில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. உதட்டில் ரத்தம் வழிந்தபடி காணப்பட்டது. வீட்டில் இருந்த 2 லேப்டாப், ஓரளவு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தன. கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன.
அக்கா மகன் கைது
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலை பற்றி, எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக எம்மாவின் அக்காள் மகன் இம்மானுவேல் பெர்னாண்டஸ் (52) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையில் சம்மந்தம்..
இதுபற்றி, கூடுதல் போலீஸ் கமிஷனர் ஆபாஷ்குமார் கூறுகையில், "இந்த கொலை வழக்கு மிகவும் விசித்திரமானது. எம்மாவின் அக்காள் மகன் இம்மானுவேல் பெர்னாண்டசை கொலை வழக்கு தொடர்பாக கைது செய்துள்ளபோதிலும், அவர் இக்கொலையை நேரடியாக செய்யவில்லை. ஆனால் அவரது நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது, இம்மானுவேலுக்கு இக்கொலையில் சம்மந்தம் உள்ளது தெரியவந்தது.
சடலம் கண்டெடுப்பு
கொலை நடந்த 13ம் தேதி இரவு 11 மணிக்கு, எம்மாவின் வீட்டுக்கு, அவரது தங்கை பிர்டி சென்று கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால், மற்றொரு சாவி மூலமாக கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அங்கு, எம்மா அவரது படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார். பிர்டி இது பற்றி உடனே நீலாங்கரையிலுள்ள, இம்மானுவேலுக்கு தகவல் கொடுத்துள்ளார். இம்மானுவேலும் எம்மா வீட்டுக்கு உடனடியாக வந்துள்ளார்.
மறைக்க முயற்சி
ஆனால் எம்மாவின் சாவு பற்றி போலீசுக்கு இம்மானுவேல் தகவல் கொடுக்கவில்லை. உடலை இரவோடு, இரவாக புதைக்க முயன்றுள்ளார். ஆம்புலன்ஸ் வேனை வரவழைத்து உடலை எடுத்து செல்லவும் முயற்சித்துள்ளார். இயற்கையான மரணம் என்று கூறி தனியார் மருத்துவமனையில் சான்றிதழ் பெற இம்மானுவேல் முயற்சித்துள்ளார். ஆனால் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த தனியார் மருத்துவமனை, அவருக்கு சான்றிதழை அளிக்க மறுத்துவிட்டது.
வழியில்லாமல் தகவல்
இதனால், அடக்கம் செய்ய, உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் டிரைவர் மறுத்து விட்டார். எம்மாவின் உடலை, ஒன்றும் செய்ய முடியவில்லை. பிறகு மற்ற உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், உடலை வீட்டில் வைத்துள்ளார். மறுநாள் 14ம் தேதி காலை 8 மணிக்குதான் எழும்பூர் போலீசுக்கு, எம்மாவின் சாவு குறித்து வேறு வழி இல்லாமல் இம்மானுவேல் தகவல் கொடுத்துள்ளார்.
அடப்பாவமே..
எம்மாவுக்கு சில கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. அந்த சொத்துக்களை, எம்மா தனது பெயரில் எழுதி வைத்துள்ளதாக, இம்மானுவேல் போலி உயில் தயாரித்துள்ளதை கண்டுபிடித்தோம். அதே நேரம் எம்மா எழுதி வைத்துள்ள உண்மையான உயில், அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதில் விந்தை என்னவென்றால், உண்மையான உயிலில், எம்மா தனது சொத்துக்களை இம்மானுவேலுக்குத்தான் எழுதி வைத்துள்ளார். அந்த விஷயம் தெரியாமல், இம்மானுவேல், எம்மாவின் சொத்துக்களை அடைய போலி உயில் தயாரித்துள்ளார்.
கொலையாளி யார்?
காலதாமதமாக போலீசாருக்கு எம்மாவின் சாவு குறித்து தகவல் கொடுத்தது, கொலை தடயங்களை மறைக்க முற்பட்டது, போலி உயில் தயாரித்தது உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும்போது சொத்துக்காக இம்மானுவேல் கொலை திட்டம் தீட்டியது அம்பலமாகிறது. அதேநேரம் வேறு நபரை ஏவிவிட்டு, எம்மாவை, இம்மானுவேல் கொன்றிருக்க வேண்டும். இம்மானுவேலிடம் விசாரித்து, கொலை செய்த நபர் குறித்து தெரிந்துகொள்ள உள்ளோம்" என்றார். நீலாங்கரையில் ரிசார்ட் நடத்திவரும் இம்மானுவேலுக்கு, மனைவியும், மகன் மற்றும் மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.