தப்பான பிளாஸ்டிக் சர்ஜரி.. பெண்ணுக்கு ரூ. 7.55 லட்சம் நஷ்ட ஈடு தர மருத்துவமனைக்கு உத்தரவு
சென்னை: விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு தவறான அறுவைச் சிகிச்சை செய்ததாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரூ. 7.55 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வருகிறது அப்பல்லோ பர்ஸ்ட் மெட் மருத்துவமனை. இங்கு கடந்த 2005ம் ஆண்டு ஜூலை மாதம் கார் மோதிய விபத்தில், இடது காலில் காயத்தோடு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார் நீரஜா என்ற பெண்.
நீரஜாவை பரிசோதித்த பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் வெங்கடசாமி, ஐந்து நாள் தாமதத்திற்குப் பிறகு அவரது காலில் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். ஆபரேஷன் முடிந்த சில நாட்களில் காலில் கடும் வலியை உணர்ந்துள்ளார் நீரஜா. இதனால் மீண்டும் அவருக்கு மற்றொரு ஆபரேஷன் செய்துள்ளனர். மொத்தமாக சிகிச்சைக் கட்டணமாக ரூ. 1.45 லட்சம் நீரஜாவிடம் இருந்து வசூலித்துள்ளனர்.
ஆனால், இந்த இரண்டு ஆபரேஷன்களுக்குப் பிறகும் நீரஜாவால் இடது காலால் நேராக நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. டாக்டர்களின் தவறான சிகிச்சை மற்றும் மருத்துவமனையின் அலட்சியமே தனது இந்த நிலைக்கு காரணம் என வடசென்னை நுகர்வோர் அமைப்பில் புகார் செய்தார் நீரஜா.
ஆனால், தங்களது பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவெ நீரஜா இந்தப் புகாரை அளித்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இது தொடர்பாக நீரஜாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வெங்கடசாமி அளித்துள்ள விளக்கத்தில், "நீரஜாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் போது அவர் கர்ப்பிணியாக இருந்ததால், தினமும் இரண்டு வேளை அவரை நான் சென்று பரிசோதனை செய்து வந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த ஜெயபாலன் மற்றும் கலையரசி இருவரும், ‘நீரஜாவின் மருத்துவ அறிக்கையைப் பார்க்கும் போது, அவருக்கு ஆபரேஷன் செய்வதற்கு தேவையில்லாமல் காலதாமதம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், நீரஜாவின் காலில் சரிவர ஆபரேஷன் செய்யப்படாமல், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதும் ஆதாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது.
இதனால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவமனை நிர்வாகமும், ஆபரேஷன் செய்த இரண்டு டாக்டர்களும் சேர்ந்து ரூ. 7.50 லட்சம் நிவாரணம் மற்றும் வழக்குச் செலவாக ரூ. 5000 வழங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.