தூத்துக்குடி துறைமுகத்தில் சகாயம்... கிரானைட் ஏற்றுமதி வரி செலுத்தப்பட்டதா என விசாரணை
தூத்துக்குடி: மதுரை கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் சட்ட ஆணையர் சகாயம், இன்று தூத்துக்குடி துறைமுகத்தில் திடீர் ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். பல்வேறு கட்ட விசாரணைகளை முடித்துள்ள அவர், தற்போது இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த பணியின்போது அவருக்கு மிரட்டல் போன்கள், கடிதங்கள் வந்தன. இதனை தொடர்ந்து சகாயத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சம்பந்தப்பட்ட குவாரிகள் மற்றும் கிரானைட் கற்கள் எடுக்கப்பட்ட பகுதிகளில் சகாயம் விசாரணை நடத்தி முடித்திருந்தார். அதன் பின்னர் அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மனு கொடுத்தனர். இதன் அடிப்படையிலேயே அவர் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
நரபலி விவகாரம்...
இந்நிலையில் டிரைவர் சேவற்கொடியான் அளித்த புகார் மனுவின் அடிப்படையில், நேற்று சின்னமலம்பட்டியில் பிஆர்பி கிரானைட் நிறுவனத்தினர் நரபலி கொடுத்ததாக கூறப்படும் இடத்தில் சகாயம் விசாரணைக்குழு உட்பட ஐந்து குழுக்கள் முன்னிலையில் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு நான்கு எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப் பட்டன.
மயானத்தில் தங்கிய சகாயம்...
முதலில் சம்பந்தப்பட்ட இடத்தை தோண்ட காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்காததால், இரவு முழுவதும் மயானத்திலேயே தங்கினார் சகாயம். அதனைத் தொடர்ந்து தோண்டும் பணி நேற்று நடைபெற்றது.
தூத்துக்குடி ஆய்வு..
இந்நிலையில், இன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் சகாயம். சுங்கத்துறை கூடுதல் ஆணையர் சுரேஷ் மற்றும் அதிகாரிகளிடம் சகாயம் விசாரணை நடத்தினார். ஆண்டுக்கு எவ்வளவு கிரானைட் ஏற்றுமதி ஆகிறது போன்ற விவரத்தையும் கேட்டறிந்தார். தூத்துக்குடி துறைமுகத்தில் கிரானைட் ஏற்றுமதி முனையத்திலும் சகாயம் ஆய்வு மேற்கொண்டார்.
விசாரணை...
தூத்துக்குடி துறைமுகம் வாயிலாகவே மதுரையில் இருந்து கிரானைட் கற்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. அதே போல், கிரானைட் நிறுவனங்களுக்கு தேவையான இயந்திரங்களும் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாகவே தமிழகத்திற்கு வருகின்றன. எனவே, இந்த ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தவே இன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு சகாயம் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஒரு வாரத்தில் அறிக்கை...
கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சகாயம் அறிவித்துள்ள நிலையில், அவரின் இந்த திடீர் தூத்துக்குடி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறுதி கட்டத்தில் விசாரணை...
இது தொடர்பாக சகாயம் கூறுகையில், ‘மதுரை கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது'என்றார். எனவே, இன்றைய சகாயத்தின் ஆய்வும் விசாரணை அறிக்கையில் சேர்க்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.