புகாருடன் வருபவர்களை மந்திரவாதியிடம் அனுப்பி வைக்கும் இன்ஸ்பெக்டர்.. இதை எங்க போயி சொல்றது?!
திருடனை பிடித்து தருமாறு கேட்டு வந்தவரை மந்திரவாதியிடம் அனுப்பியுள்ளார் ஒரு இன்ஸ்பெக்டர்.
Recommended Video
சேலம்: ஸ்காட்லாந்து போலீசாருக்கு அடுத்தது நாமதான் என்று மார்தட்டிக் கொண்டிருந்தால், இங்க ஒரு போலீஸ்காரர், குற்றவாளியை கண்டுபிடிக்க மந்திரவாதியிடம் வரிசைகட்டி அனுப்பி கொண்டிருக்கிறார். இந்த கொடுமையை எங்க போயி சொல்றது?
சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் நிர்மலா என்பவர். இவருக்கு வயது 40. போன மாசம், 15-ம் தேதி இவருடைய வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் 11.5 பவுன் நகையை அபேஸ் செய்துவிட்டு போய்விட்டனர்.நகை கொள்ளை போகவும் அதிர்ச்சியடைந்த நிர்மலா, உடனடியாக கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுக்க போனார்.
மந்திரவாதியிடம் போங்கள்
அப்போது அங்கே பணியில் இன்ஸ்பெக்டர் இருந்திருக்கிறார். அவரிடம் நகை திருட்டு போன விவரத்தை சொன்னார் நிர்மலா. அதற்கு அந்த இன்ஸ்பெக்டர் ஒரு மந்திரவாதி பெயரை சொல்லி, "நீங்கள் இவரிடம் போங்கள். அவரிடம் நடந்த விவரம் எல்லாத்தையும் சொல்லுங்கள். அவர் வெற்றிலையில் மை போட்டு, உடனே யார் உங்கள் நகையை திருடினார்கள்-ன்னு சொல்லிடுவார். அதுக்கப்பறம் நாங்க வந்து அந்த குற்றவாளியை பிடித்துவிடுகிறோம்" என்றார்.
வெற்றிலையில் திருடன்?
நகையை தொலைத்துவிட்டு விரக்தியில் இருந்த நிர்மலாவோ, இன்ஸ்பெக்டர் சொன்ன அந்த மந்திரவாதியை தேடி போனார். விவரத்தையும் சொன்னார். அனைத்தையும் கேட்ட மந்திரவாதி, "முதலில் 850 ரூபாய் கொடுங்கள்" என்றார். கேட்ட பணத்தையும் கொடுத்தார் நிர்மலா. பிறகு மந்திரவாதி ஒரு வெற்றிலையை எடுத்தார். அதில் மையை தடவினார். உள்ளே உற்று உற்று பார்த்தார். சிறிது நேரம் கழித்து "வெற்றியிலையில் திருடன் வரவில்லை. சரி... இப்ப போயிட்டு 15 நாள் கழிச்சு வாங்க. அதுக்குள்ள திருடனை வெற்றிலையில் பார்த்துடலாம்" என்றார்.
எடை குறைந்த நகை
இதனிடையே நிர்மலாவின் வீட்டில் நகையை திருடிய அந்த மர்மநபர்கள் சிக்கி கொண்டனர். அவர்களிடம் நிர்மலாவின் 6.5 பவுன் நகையை மீட்டு போலீசார் நிர்மலாவிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட பின்னர்தான் தெரிந்தது அந்த நகை எடை குறைந்து காணப்பட்டது என்று. பிறகு, நிர்மலா நகைகளை எடை போட்டு பார்த்தார், 6.5 பவுன் நகை, 4.5 பவுனாக குறைந்திருந்தது. இது தொடர்பாக நிர்மலா குடும்பத்தில் மாநகர துணை கமிஷனரை நேரில் சந்தித்து புகார் மனுவினையும் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சத்தியமா திருத்தவே முடியாது
திருடனை பிடிக்க ஒரு போலீசார் மந்திரவாதியிடம் அனுப்பலாமா? வெற்றிலையில் திருடன் மட்டும் வந்திருந்தால் ஒரு திருட்டும் நாட்டில் நடந்திருக்காதே? நம்ம நாடும் உலக அரங்கில் எங்கோ போயிருக்குமே? படித்தவர்களே, பொறுப்புள்ள பதவியில் இருக்கும் சிலரே இந்த மூடநம்பிக்கையில் சிக்கி தவித்தால், பாமரர்களின் கதி என்ன? இன்னும் எத்தனை பெரியார்கள், அம்பேத்கர்கள் வந்தாலும் இது போன்ற மக்களை சத்தியமாக திருத்தவே முடியாது.