போலீஸாரை தாக்கியது நாங்கள் அல்ல: அதற்காகவா கட்சி நடத்துகிறோம்- சீமான் சீறல்
போலீஸாரை தாக்கியது நாங்கள் அல்ல, அவர்களை தாக்குவதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸாரை தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் அல்ல என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்தது. அப்போது எரியும் நெருப்பில் நெய் ஊற்றுவது போல் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கு வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரி அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
பணிகள் தீவிரம்
ஐபிஎல் போட்டிகள் கடந்த 10-ஆம் தேதி சென்னையில் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அன்றைய தினம் அண்ணா சாலையில் நடந்த புரட்சி போராட்டத்தால் சென்னையே ஸ்தம்பித்தது. இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் தமிழ் அமைப்பு என கலந்து கொண்டனர்.
காவலர் மீது தாக்குதல்
இந்த போராட்டத்தின் போது போலீஸ்காரர் 3 பேர் மீது கையில் ஒரு கொடியை ஏந்தி கொண்டு ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த வீடியோ வைரலாகியது. இதைத் தொடர்ந்து காவலர்கள் புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 8 பேர் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எப்படி முடிவு செய்தீர்
இதுகுறித்து சீமான் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல. போலீஸாரை தாக்குவதற்குத்தான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோமா. போலீஸாரை நாம் தமிழர்தான் தாக்கினார்கள் என்பதை எப்படி முடிவு செய்தீர்கள். முறையாக விசாரணை நடத்தி கைது செய்யுங்கள். தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சியினரை கைது செய்யாதீர்.
போலீஸ் நடவடிக்கை
காவலர்களை தாக்கியது தவறு என்றால் போராடுபவர்களை காவலர்கள் தாக்குவதும் தவறுதான். விலக்கி விட்ட என் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டுள்ளது. யார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறு
எந்த அமைப்பு எந்த கட்சி என்பது குறித்து தெரியாமல் நாம் தமிழர் மீது குற்றம்சாட்டுவது தவறு ஆகும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்றாலே நாம் தமிழர் கட்சியை போல் கட்டுக்கோப்பாக ஊர்வலத்தை நடத்துங்கள் என்று உதாரணம் கூறிய கட்சி எங்களுடையது. அப்படியிருக்கும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் நாங்கள் எப்படி வன்முறையில் ஈடுபடுவோம்.
ஆதாரம் இல்லாமல் கைது
ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக கூறிய போலீஸார் இதுவரை கட்சியினர் 46 பேரை கைது செய்தனர். நான் கொலை முயற்சியில் ஈடுபடவில்லை என்பது போலீஸாருக்கே தெரியும். அதனால் என்னை விடுவித்துவிட்டனர்.
காவிரி விவகாரம் எதையும் கூறவில்லை
திருவிடந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொண்ட மோடி திருக்குறள் கூறியுள்ளார். அதை நாங்கள் கேட்டோமா, தமிழர்கள் கொதித்து போயுள்ளனர். இந்த நேரத்தில் இப்படி உச்சரிப்பில் திருக்குறளை கூறினால் எதிர்க்காமல் என்ன செய்ய முடியும். எழுதி கொடுத்தவர்கள் ஒழுங்காக எழுதிகொடுத்திருக்க வேண்டாமா. தமிழகத்தில் காவிரி போராட்டம் நடைபெறுகிறது, பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுகின்றனர், ஆனால் காவிரி விவகாரம் குறித்து எதையும் கூறாமல் செல்கிறார் மோடி என்றார் சீமான்.