விமானம் போய்....இப்போ படகு- இலங்கையிலிருந்து ரூ 2 கோடி தங்கம் கடத்திய 2 பேர் கைது
வேதாரண்யம்: இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு படகு மூலம் கடத்தி வந்த 8 கிலோ தங்க கட்டிகளை வேதாரண்யம் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இக்கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விமானத்தில் கடத்தி வரும் தங்க கட்டிகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பொறிவைத்து பிடித்து பறிமுதல் செய்து விடுவதால், கடத்தல்காரர்கள் தங்க கட்டிகளை இலங்கைக்கு கொண்டு சென்று அங்கிருந்து கடல்வழியாக படகு மூலம் தமிழகத்திற்கு கடத்தி வருகிறார்கள். கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட தங்க கட்டிகளை காரில் தாங்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து விடுகிறார்கள்.
சாதாரண மீன்பிடி படகுகளில் அதிக சக்திவாய்ந்த எந்திரத்தை பொருத்தி தங்க கட்டிகள் அந்த படகுகளில் கடத்தி வரப்படுகின்றன. ஏற்கனவே வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இதுபோல், கடல் வழியாக கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் பெரிய அளவில் பறிமுதல் செய்தனர்.
நேற்று முன்தினம் இரவும் இலங்கையில் இருந்து மீன்பிடி படகு மூலம் தங்க கட்டிகள் பெரிய அளவில் கடத்தி வரப்படுவதாகவும், நாகப்பட்டினத்திற்கும், வேதாரண்யத்திற்கும் இடையே உள்ள கடற்கரை பகுதிக்கு அந்த தங்க கட்டிகள் கொண்டு வரப்படுவதாகவும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் வேதாரண்யம், நாகப்பட்டினம் கடற்கரை பகுதிகளில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு மாறுவேடத்தில் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஆனால் கடத்தல்காரர்கள் வருவாய் புலனாய்வு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தங்க கட்டிகளை கடத்தி வந்துவிட்டனர். கடற்கரை பகுதியில் அவர்களை மடக்கி பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் முயற்சியை கைவிடாமல் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய அனைத்து சாலை பகுதிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்-திருச்சி இடையே உள்ள வாழவந்தான் கோட்டை சோதனைச் சாவடியில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று காலையில் வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை நடத்தினார்கள். காரில் 2 பைகளில் கடத்தல் தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றின் மொத்த எடை 8.325 கிலோ ஆகும். அதன் மதிப்பு ரூபாய் 2.21 கோடி. தங்க கட்டிகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்க கட்டிகளை கடத்தி வந்த சுகேந்திரன், பாக்யராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தங்க கட்டிகளை கடத்தி வர பயன்படுத்திய இன்னோவா காரும் பறிமுதல் செய்யப்பட்டது.