காரில் சென்னை பெண் நீதிபதி தாக்கப்பட்ட விவகாரம்.... தாக்கியவர்களைப் பிடிக்க 2 தனிப்படை
நாகை: வேளாங்கண்ணி அருகே காரில் சென்ற பெண் நீதிபதியை தாக்கியவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதியாக லதா பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் நாகைக்கு வந்து விட்டு வேதாரண்யத்திற்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தார். காரை டிரைவர் சதீஸ் ஓட்டி வந்தார். காரில் நீதிபதியின் அலுவலக உதவியாளர் தனபால் இருந்தார்.
கார் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள் காரை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையால் காரை தாக்கினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது. இதை பார்த்த டிரைவர் சதீஸ் கார் கதவை திறந்து வெளியே வந்து மர்ம நபர்களிடம் இது நீதிபதியின் வாகனம் என கூறியுள்ளார். உடனே மர்ம ஆசாமிகள் டிரைவர் சதீசை தாக்கினர். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போது கார் ஜன்னல் வழியாக நீதிபதி லதா வெளியே எட்டி பார்த்த போது மர்மஆசாமி ஒருவன் உருட்டுக்கட்டையால் அவரின் தலையில் தாக்கிவிட்டு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நீதிபதி லதா கொடுத்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உத்தரவின் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் மற்றும் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications