நிதிநிலைமை படுமோசம்.. திவாலாகப் போகிறது தமிழகம்.. மு.க.ஸ்டாலின் பகீர்
சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட காசோலை பணம் இல்லாமல் திரும்பும் அளவிற்கு நிதிநிலைமை படு மோசமாக உள்ளதாக திமுக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகம் திவாலாகும் அளவிற்கு நிதிநிலை படுமோசமாகிவிட்டதாக திமுக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் பகிரங்க குற்றம்சாட்டியுள்ளார். மாநிலத்தின் நிதி வரலாறு மற்றும் அதிமுக ஆட்சியில் சரிந்து வரும் தற்போதைய ஆபத்தான நிதிச் சூழலைத் தமிழக மக்களுக்குத் தெரிவித்திடும் பொறுப்பு இருப்பதால் இன்று இந்த அறிக்கையை வெளியிடுவதாக கூறியுள்ளார்.
கடனில் தத்தளிக்கும் தமிழகம், இன்னும் மோசமான நிலைமை வரவிருக்கிறது தமிழ்நாடு அரசு "நிதிநிலை 2017" என்ற பெயரில் சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆய்வறிக்கை தயாரித்துள்ளார். அந்த ஆய்வறிக்கை குறித்து திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:
2017ம் ஆண்டின் ஆளுநர் உரைக்காக கூட்டப்பட்ட சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளான பிப்ரவரி 1ம் தேதியன்று 2016-2017ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையின் வரவு மற்றும் செலவு குறித்த ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கவலை தரும் அறிக்கை
இந்த ஆய்வு அறிக்கையில் அடங்கியுள்ள விவரங்கள் தான் கவலையளிக்கிறது. நிதி நிலைமை செம்மையாக இருப்பதற்கான அடையாளங்கள் அனைத்தும் முதல் ஆறு மாதங்களில் எந்த அளவிற்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. பயணப்படி, மருத்துவ செலவுகள் போன்றவற்றிற்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை செயலகத்தின் மூலம் கொடுக்கப்பட்ட காசோலைகள் வங்கிகளில் பணமில்லாமல் திரும்பி வந்ததாக தகவல் வெளிவந்தது.
கஜானாவில் நிதியில்லை
சட்டசபை முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் நிதியில்லாத காரணத்தால் தாமதம் செய்யப்படுகின்றன என்ற செய்திகளும் வெளியிடப்பட்டன. சட்டசபை உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால், முதியோர் உதவித்தொகை போன்றவற்றை வாங்கும் ஏழை எளிய மக்களுக்கு எவ்வளவு சிரமங்கள் உருவாகியிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.
வருவாய் பற்றாக்குறை
இந்த செய்திகள் எல்லாம் மாநில நிதி பற்றிய முன்னெச்சரிக்கை சமிக்ஞைகளாக இருந்ததால், பொருளாதார நிபுணத்துவம் பெற்றவர்களை வைத்து மாநிலத்தின் நிதி நிலைமை பற்றி ஆய்வு செய்ய திமுக சார்பில் அறிவுறுத்தினேன். அந்த ஆய்வில் வெளிவந்துள்ள விஷயங்களைப் பார்த்தால் மாநில நிதி நிலைமை பற்றி பெரிய கவலையை எவருக்கும் ஏற்படுத்தும்.
இந்த நிதியாண்டில் (2016-17) கணிக்கப்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை ரூ.15,855 கோடி என்பது "நிதி பொறுப்புச் சட்டம்" அறிமுகப்படுத்தப்பட்ட 2003ம் ஆண்டில் இருந்து கடந்த 13 ஆண்டுகால ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறையை விட அதிகமாக இருக்கிறது.
படுமோசம்
இந்த இடைக்கால ஆய்வு அறிக்கையின்படி (பிப்ரவரி 2017) பார்த்தால் பற்றாக்குறையானது கணக்கிடப்பட்டுள்ள தொகையை விட மிக அதிகமாக இருக்கும். ஏனென்றால், முதல் ஆறு மாத காலத்திலேயே ரூ.13,804 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. (இது முழு ஆண்டின் பட்ஜெட்டில் 87% சதவீதம்). பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி, வர்தா புயல், எண்ணுர் எண்ணெய் விபத்து என இயற்கை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டை விட இரண்டாவது அரையாண்டு மிக மோசமானதாக இருக்கிறது.
எதிர்மறை தாக்கம்
ஓரளவு உகந்த காலமாக இருந்த முதல் அரையாண்டிலேயே நிர்ணயிக்கப்பட்ட மூலதன முதலீடான ரூ.24,679 கோடியை எட்டவில்லை. அதற்கு பதில் மிக குறைவாக ரூ.5,166 கோடி (வருடாந்திர பட்ஜெட்டில் 21%) மட்டுமே மூலதன முதலீடாக பெறப்பட்டுள்ளது. இது நிச்சயமாக எதிர்கால வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும்.
இறுதியாக, அந்த அறிக்கையை மிகப் பொறுமையாக வாசித்தப் பின் கடன் மற்றும் வட்டி செலவினங்களிலும் சில நீண்ட கால மாற்றங்கள் இருப்பதை உணர்த்துகிறது.
பழனிவேல் தியாகராஜன்
மாநிலத்தின் நிதி வரலாறு மற்றும் அதிமுக ஆட்சியில் சரிந்து வரும் தற்போதைய ஆபத்தான நிதிச் சூழலைத் தமிழக மக்களுக்குத் தெரிவித்திடும் பொறுப்பு இருப்பதால் இன்று இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். மேலும், சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். தமிழக வரலாற்றில் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் என்ற முறையில், சட்டசபையில் நடைபெறும் விவாதங்களின் தரத்தை உயர்த்தும் கடமையும், திமுக செயல் தலைவர் என்ற முறையில் மாநிலத்தின் நிதி நிலையை தமிழக மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கும் பொறுப்பும் எனக்கு உள்ளது.
நிதிநிலை அறிக்கை
ஏற்கனவே பட்ஜெட் விவாதம் குறித்த சட்டமன்ற கூட்டத்தொடரை 5 நாட்களாக குறைத்த அதிமுக அரசு, இப்போது பட்ஜெட் கூட்டத் தொடரிலும் விவாதத்தை மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. அப்படி ஒருவேளை நேர்ந்தால் இதை ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் இந்த அரசு மற்றும் பேரவைத் தலைவரின் அராஜக அணுகுமுறையாகவே நான் கருதுகிறேன். ஆகவே இந்த அறிக்கை, 16ம் தேதி தொடங்க இருக்கும் சட்டசபைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் மீதான விவாதப் பொருளின் உள்ளடக்கத்தை செழுமைப் படுத்திட , உயர்த்திட உதவும் என்று நம்புகிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.