இதுவரை லதிமுக.. இனி அது இலதிமுக.. டி.ராஜேந்தரின் நியூமராலஜி சென்டிமென்ட்!
அனைத்திந்திய லட்சிய திமுக கட்சியை இலட்சிய திமுகவாக மாற்றியுள்ளார் டி. ராஜேந்தர்.
Recommended Video
சென்னை: அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய டி. ராஜேந்தர் மீண்டும் தனது கட்சியை பட்டி டிங்கரிங் பார்த்து பெயரை இலட்சிய திராவிட முன்னேற்றக்கழகமாக மாற்றியுள்ளார்.
திமுகவின் முக்கியப் புள்ளியாக கொள்கைப் பரப்பு செயலாளராக திகழ்ந்தவர் டி.ராஜேந்தர். திமுகவில் இருந்த போது எம்ஜிஆரை கடுமையாக விமர்சித்தவர். பின்னர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
1989ம் ஆண்டு நடந்த சட்டசபைத்தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதால் திமுகவில் இருந்து விலகினார்.
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டி
இதையடுத்து கட்சியிலிருந்து விலகி தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.
பர்கூர் தொகுதியில்1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.
திமுக எம்எல்ஏவாக வெற்றி
திமுகவில் பிளவு ஏற்பட்டு வைகோ வெளியேறினார். இதைத் தொடர்ந்து மீண்டும் திமுகவில் இணைந்தார் டி.ஆர். பின்னர் சென்னை பூங்கா நகர் தொகுதியை திமுக அவருக்கு ஒதுக்கியது. அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார் டி.ஆர். ஆனால் மறுபடியும் கட்சித்தலைமையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அஇலதிமுக தொடங்கிய டிஆர்
2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவருக்கு சீட்கொடுக்கப்படவில்லை. இதனால் திமுகவிலிருந்து ஒதுங்கியிருந்தார். கடந்த 2004ம் ஆண்டு அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அந்த கட்சியின் பெயர் பலகையில் பெரியார், அண்ணா படங்களுடன் டி. ராஜேந்தர் படமும் இடம் பெற்றிருக்கும்.
இலட்சிய திமுக
2013 ஆண்டு மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். திமுகவில் இணைந்து விட்டதாகவும் தகவல் வெளியானது. அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கியே இருந்தார். ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடிதம் எழுதினார். அதில் இலட்சிய திமுக என்று லெட்டர் பேடில் மாற்றியிருந்தார்.
நடிகர்கள் அரசியல் பயணம்
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வரத்தொடங்கியுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் டி. ராஜேந்தரும் தனது பழைய கட்சியை லேசா தூசு தட்டியுள்ளார். இன்று கட்சியின் பெயர் பலகையை திறந்த டி. ராஜேந்தர் தனது வழிகாட்டிகளை வணங்கி பயணத்தை தொடங்குவதாக கூறியுள்ளார்.
அதிமுக நிறுவனர்கள்
புதிய கட்சி பேனரில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் சிறியதாகவும், டி.ராஜேந்தரின் படம் பெரியதாகவும் இடம் பெற்றுள்ளன. திடீரென தனது பெயரை இலதிமுக என மாற்றம் செய்ய நியூமராலஜி காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நியூமராலஜியா?
ஜோதிடத்திலும் நியூமராலஜியிலும் அதிகம் நம்பிக்கை கொண்டவர் டி. ராஜேந்தர். தனது பெயரை முன்பு விஜய டி.ராஜந்தர் என்று மாற்றினார். பின்னர் மீண்டும் டி. ராஜேந்தர் என்று மாற்றினார். இப்போது கட்சிப்பெயரையும் மாற்றியுள்ளார். திமுகவில் இருந்த போது யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ அதே எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்களை தனது கட்சி பேனரில் பயன்படுவதுதான் காலத்தின் கோலம்.