வயதானவரின் பூணூலை அறுத்து அநாகரீகமாக நடந்தது தவறான செயல்... தமிழசை கடும் கண்டனம்
சென்னை: தமிழகத்தில் கோவில் குருக்கள் ஒருவரின் பூணுல் அறுக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நேற்று மாலை 7மணி அளவில் மயிலாப்பூர் கோவிலில் பிரார்த்தனை முடித்துக் கொண்டு மாதவப்பெருமாள் கோவில் தெருவில் உள்ள தன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த 80 வயது நிரம்பிய பெரியவரான விஸ்வநாத குருக்களைத் தாக்கி துன்புறுத்தி அவரது பூணூலையும் அறுத்தெறிந்து பெரியார் வாழ்க என்று கோஷமிட்டவாறே அராஜகம் செய்துள்ளனர்.

கொளத்தூர் மணியை தலைவராக கொண்டுள்ள திராவிட விடுதலை கழகத்தினர் இச்செயல் மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் யாருக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்க இயலாது. தமிழக பாஜக இதை மிக வன்மையாக கண்டிக்கிறது.
அவரவர் கொள்கைகளை ஓங்கிப்பிடித்து கருத்துக்களை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அதற்காக ஏதுமறியாத அப்பாவி பெரியவரை அவரது வீட்டிற்கு அருகிலேயே, நடுத்தெருவில் தாக்கியது மிகக் கொடூரமான செயல் என்பதோடு, அனைத்து தரப்பினராலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
விஸ்வநாத குருக்கள், பாரதிய ஜனதா கட்சியின் தென்சென்னை கலை மற்றும் கலாச்சாரப்பிரிவில் பொறுப்பாளராக இருக்கும் மங்கலநாதனின் தகப்பனார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்திற்குப் பிறகு, அப்பெரியவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.
கருத்துச் சுதந்திரமும், கொள்கைப்பிடிப்பும் மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகளும் அவரவரின் விருப்பு, வெறுப்புக்களைப் பொறுத்தது. இதில் மற்றவர் தலையீடு என்பது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு ஒப்பாகும்.
திராவிடக் கழகத்தினர் இம்மாதிரியான கோழைத்தனமான செயல்களை அரங்கேற்றுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் உணர்ச்சிகளுடனும் உரிமைகளுடனும், விளையாடுவதை இனியும் தொடரக்கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மேலும் இதே மாதிரியான பிறிதொரு நிகழ்வு, நேற்று மேற்கு மாம்பலம் சத்திய நாராயணா கோவில் அருகிலும் நடந்தேறியுள்ளது என்பதை நோக்குகையில், திராவிடக் கழகத்தினர் திட்டமிட்ட முறையில் இம்மாதிரியான நாகரீகமற்ற செயல்களை நடத்தியுள்ளனர் என்பது தெரியவருகிறது.
திராவிட விடுதலைக் கழகத்தினர் தமது கருத்துக்களை மற்றவர்கள் மீது நேரடியாகத் திணிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்து குழப்பத்தையும், வேறுபாடுகளையும் தோற்றுவிக்கும் இம்மாதிரியான அராஜக செயல்களை இனியும் அவர்கள் தொடராத வண்ணம் இந்நிகழ்வினை அனைத்துக் கட்சியினரும் வன்மையாகக் கண்டிக்க முன் வர வேண்டும்.
வன்முறையில் ஈடுபட்டுள்ள திராவிட விடுதலைக் கழகத்தின் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருப்பினும் தமிழக அரசு, உடனடியாக நடவடிக்கை எடுத்து இம்மாதிரியான அராஜகங்கள் தமிழ்நாட்டில் தொடராத வண்ணம் சட்டம் ஒழுங்கினைப் பேண வேண்டும்.
பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். வன்முறைச் செயல்களில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது''என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications