விஜய் தப்பாக வசனம் பேசியதாக கூறிய தமிழிசையே இப்படி தப்பு செய்யலாமா?
பேஸ்புக்கில், பிழையான கருத்தை கூறியதை அறிந்து, அந்த போஸ்ட்டை தமிழிசை சவுந்தரராஜன் நீக்குவாரா என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.
Recommended Video
சென்னை: போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
சமீபத்தில் மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி குறித்த தவறான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி விஜய் ரசிகர்கள் எதிர்ப்பை சம்பாதித்தவர் தமிழிசை. இதையடுத்த பல பேட்டிகள் சிலரை உசுப்பேற்றியுள்ளன.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் தமிழிசையை கேலி செய்து பலரும் மீம்ஸ் வெளியிட ஆரம்பித்தனர். சில மீம்கள் அநாகரீகமாக இருப்பதாக கூறி தமிழிசை தரப்பில் புகார் எழுந்துள்ளது.
தமிழிசை புகார்
இரவும் கூட தனது போன் தொடர்ந்து அடித்தபடியே உள்ளது. எதிர்முனையில் பேசுவோர்கள், எரித்துவிடுவேன், கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்று தமிழிசை தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
போலியோ ஒழிப்பு
இந்த நிலையில், இன்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு படத்தில், போலியா இல்லாத இந்தியா, குழந்தைகளை முடமாக்கிய போலியோ நோயை முழுவதுமாக ஒழித்த நாடு இந்தியா என கூறப்பட்டு அதன்கீழே, உலக சுகாதார நிறுவனம், மார்ச் 27/2014 சான்றுதழின்படி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கும் கீழே, தூய்மை இந்தியா கனவு நாயகன் மோடிக்கு நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியுடன், அமித்ஷா
இந்த பேஸ்புக் போஸ்டில், இடமிருந்து வலம் என்ற வரிசையில், முதலில் தமிழிசை, நடுவே பிரதமர் மோடி, அந்தப்பக்கம் பாஜக தலைவர் அமித்ஷா படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்திற்கும் நெட்டிசன்கள் முஷ்டி முறுக்கி மோதலுக்கு தயாராகிவிட்டனர்.
பல அரசுகளின் முயற்சி
போலியோ ஒழிப்பு என்பது இந்தியாவை ஆண்ட பல அரசுகளின் தொடர் முயற்சியின் எதிரொலி. மருத்துவர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் அந்த கொடூர நோயை ஒழிக்க பல பிரதமர்கள் பாடுபட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், போலியோ திடீரென பாஜக அரசு பதவிக்கு வந்த பிறகு ஒழிக்கப்பட்டதை போன்ற தோற்றத்தில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களிடம், பாஜக அரசு வந்த பிறகுதான் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
இருமுறை சொட்டு மருந்து
1995ம் ஆண்டு முதல் போலியோ நோயை முற்றிலுமாக அகற்ற ஆண்டிற்கு இருமுறை சிறப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் 2014ம் ஆண்டு மார்ச் 27ம் நாள் இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆண்டுதான் ஆட்சிக்கு வந்த மோடி அரசுதான் போலியோ ஒழித்ததை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது நியாயமா என தமிழிசையிடம் கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.
தப்பான டயலாக்
சிங்கப்பூரில் இலவசமாக மருத்துவம் பார்க்கப்படுவதாக நடிகர் விஜய், மெர்சலில் பேசிய வசனம், மக்களுக்கு தப்பான விவரத்தை அளிப்பதாக கூறிய தமிழிசை, அந்த படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க கோரிக்கைவிடுத்தார். ஆனால், பேஸ்புக்கில், தானும் அதுபோன்ற ஒரு பிறழான கருத்தை கூறியுள்ளோம் என்பதை அறிந்து, இந்த போஸ்ட்டை அவர் நீக்குவாரா என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.