ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் இன்று திட்டமிட்டப்படி நடக்கும்- ஜாக்டோ அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி இன்று நடக்கிறது என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ மாநில தொடர்பாளர் பெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "எங்களுக்கு 15 அம்ச கோரிக்கைகள் உள்ளன. 6 ஆவது ஊதிய குழுவில் தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதியம் போல சமமாக வழங்கப்படவில்லை.
அவ்வாறு வழங்கப்படாமல் இருக்கும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தர ஊதியத்துடன் கூடிய சம்பளத்தை வழங்குதல். 6 ஆவது ஊதிய குழுவில் மத்திய அரசு உயர்த்தி வழங்கி உள்ள அனைத்து படிகளையும் தமிழக ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்குதல்.
அகவிலைப்படி 100 சதவீதத்தை கடந்துவிட்டதால் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து கொடுத்தல். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்ததற்கு ஏற்ப தமிழக அரசு தன் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல்.
ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 2 கட்டங்களாக அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தினோம். 3 ஆவது போராட்டமாக சென்னையில் மாநிலம் தழுவிய அளவில் நடத்தினோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் அறிவித்தோம்.
அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் வரமாட்டார்கள். அதனால் பள்ளிகள் அனைத்தும் செயல்படாது" என பெ.இளங்கோவன் தெரிவித்தார்.