சொத்து குவிப்பு: சசி பினாமிகள் ஸ்ரீதலா, கணவர் பாஸ்கரனுக்கு சிறை தண்டனையை உறுதி செய்தது ஹைகோர்ட்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரனுக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்த்த 5 ஆண்டு தண்டனையை ஹைகோர்ட் உறுதி செய்தது.
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரனுக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்த்த 5 ஆண்டு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. பாஸ்கரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சசிகலாவின் அக்காவின் மகள் ஸ்ரீதலாவின் கணவர் எஸ்.ஆர். பாஸ்கர். இவர் 1997-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியில் கிளார்க் நிலையில் பணியாற்றி வந்தார்.
பாஸ்கரன் மீது சிபிஐ வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடர்ந்தது. சென்னை சாந்தோம் கிளை கூட்டுறவு வங்கியில் பாஸ்கரின் லாக்கரில் இருந்து 50 கிலோ எடையுள்ள 60 தங்க கட்டிகளை சிபிஐ கைப்பற்றியிருந்தது.
பாஸ்கரன் மீது வழக்கு தொடரப்பட்ட காலத்தில் அவரது மொத்த ஆண்டு வருமானமே ரூ2.81 லட்சம்தான். ஆனால் வருமானத்துக்கு அதிகமாக ரூ1.8 கோடி சொத்து குவித்தார் என்பதுதான் சிபிஐ தொடர்ந்த வழக்கு.
இவ்வழக்கில் மயிலாப்பூரில் 12 மாடிகளைக் கொண்ட கட்டிடம் உள்ளிட்ட 35 அசையா சொத்துகளின் ஆவணங்களையும் சிபிஐ கைப்பற்றியிருந்தது. சசிகலாவுக்கு பினாமியாகவே பாஸ்கர் செயல்பட்டு வந்ததாகவே சிபிஐ வாதங்களை முன்வைத்தது.
1998-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகாலம் நடந்த விசாரணையில் 2008-ம் ஆண்டு பாஸ்கரனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் அவரது மனைவி ஸ்ரீதலாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது சிபிஐ நீதிமன்றம். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஸ்கரனும் ஸ்ரீதலாவும் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் பாஸ்கரன், ஸ்ரீதலாவின் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்தது. அத்துடன் பாஸ்கரனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனை, ஸ்ரீதலாவுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையையும் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.