ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த அவசர சட்டம் கொண்டு வாருங்கள்... திருமாவளவன் அறிக்கை
சென்னை: ஜல்லிக்கட்டு என்னும் ஏறுதழுவுதல் விளையாட்டை மீண்டும் நடத்திட அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காளை மாடுகளை அழிவின் விளிம்பிலிருந்து காக்கவும், தமிழர்களின் பாரம்பரிய மரபுவழி விளையாட்டான ஏறுதழுவுதல் விளையாட்டை மீட்டெடுப்பதற்கும் தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்றிட வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜல்லிக்கட்டு என்றழைக்கப்படும் ஏறு தழுவுதல் தமிழர்களின் பாரம்பரியமான வீரவிளையாட்டாகும். இதற்கு மிருகவதை என்னும் பெயரில் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
காளையை அடக்கும் வீரவிளையாட்டில் காளைகள் பாதிக்கப்படுவதில்லை. மாறாக, உயிரைப் பணயம் வைத்து காளையுடன் மோதி விளையாடும் தமிழ் இளைஞர்களே பாதிக்கப்படுவதும், சில நேரங்களில் உயிரையும் இழப்பது நேர்கிறது. எனினும், இதனை வீரத்துடன் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில், இவ்விளையாட்டை மிருகவதை என்னும் பெயரில் நிலையாகத் தடை செய்ய சிலர் முயற்சிக்கின்றனர்; நீதிமன்றமும் தற்போது தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் போதிய நீர் ஆதாரம் இல்லாததாலும், நாளுக்கு நாள் வேளாண்மை அருகி வருவதாலும், வேளாண்மைக்கு நவீன எந்திரங்களைப் பயன்படுத்தி வருவதாலும் காளை மாடுகளை யாரும் விரும்பி வளர்ப்பதில்லை. ஏறுதழுவுதல் நிகழ்ச்சிக்காக மட்டுமே பலர் காளை மாடுகளை வளர்த்து, மாடுகளின் இனப்பெருக்கத்திற்காகவும் பாதுகாத்து வந்தனர்.
உச்சநீதிமன்றம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு தடை விதித்த உடனேயே இதுவரை 80 ஆயிரம் காளை மாடுகள் அடிமாடுகளாக கேரளாவிற்கு கறிக்கடைகளுக்கு விற்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 48 மட்டும் 51 ஏ.ஜி. ஆகிய பிரிவுகளின்படி கால்நடை பராமரிப்புத் துறை மாடுகளைப் பாதுகாக்க வேண்டுமெனவும் அது அரசின் கடமையாகவும் உள்ளது எனவும் வலியுறுத்துகிறது.
ஆனால், மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்த உடனேயே காளை மாடுகள் கேரளாவிற்கு அதிக அளவில் விற்கப்படுவதை கால்நடை பராமரிப்புத்துறை தடுக்கவோ அல்லது பாதுகாக்கவோ தவறிவிட்டது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினர் முன்னிலையில் நடைபெற்றுவந்த ஏறுதழுவுதல் நிகழச்சியை, காளை மாடுகள் துன்புறுத்தப்படுவதாக தவறான தகவல்களைச் சொல்லி உச்சநீதிமன்றத்தில் தடைஆணை பெற்றுள்ளது.
மஞ்சுவிரட்டில் பங்கேற்கும் காளை மாடுகளும் அதில் பங்கேற்பவர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மேலும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அந்நிகழ்ச்சி முழுவதும் ஒளிப்பதிவும் செய்யப்படுகிறது.
எனவே, மாடுகளின் இனப்பெருக்கம் மற்றும் பால் உற்பத்தியைப் பெருக்கக் காரணமாக இருக்கும் காளை மாடுகளை அழிவின் விளிம்பிலிருந்து காக்கவும், தமிழர்களின் பாரம்பரிய மரபுவழி விளையாட்டான ஏறுதழுவுதல் விளையாட்டை மீட்டெடுப்பதற்கும் தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்றிட வேண்டும். அதன் அடிப்படையில் ஏறுதழுவுதல் விளையாட்டை மீண்டும் நடத்திட ஆவன செய்ய வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்றோம்" என்று தெரிவித்துள்ளார்.