உள்ளாட்சி இடைத் தேர்தலை நிறுத்தக் கோரி வழக்கு: தமிழிசை சவுந்திரராஜன்
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிகளும், அரக்கோணம், விருத்தாசலம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கொடைக்கானல், குன்னூர், சங்கரன்கோவில் ஆகிய 8 நகராட்சி தலைவர் பதவிகளும் காலியாக உள்ளன. இவற்றுக்கும் 12 மாநகராட்சி உறுப்பினர், 53 நகரசபை உறுப்பினர், 7 பேரூராட்சி தலைவர், 101 பேரூராட்சி உறுப்பினர், 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 82 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கட்சிகள் புறக்கணிப்பு
இத் தேர்தல் முறையாக நடக்குமா என்ற சந்தேகம் கிளப்பி திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய 9 கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. தேமுதிக, மதிமுக, பாமக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தபோதிலும், பாஜவுக்கு ஆதரவு தெரிவித்தன.
வேட்புமனு வாபஸ்
இந்த நிலையில் வேட்புமனுக்கள் வாபஸ் பெற நேற்று கடைசிநாள். அப்போது பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறின.
நெல்லையில் திருப்பம்
திருநெல்வேலி மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் திடீரென வாபஸ் பெற அதிமுகவின் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பல இடங்களில்..
அதேபோல, சென்னை, மதுரை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர், ஆவடி, பல்லாவரம், தாம்பரம் உட்பட பல நகராட்சி, ஊராட்சிகளுக்கு அதிமுக அல்லாத கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாளை வழக்கு
இதனைத் தொடர்ந்து இன்று பாஜக தலைமையகத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், உள்ளாட்சி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி அல்லது மறுதேர்தலை அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தை நாளை நாட இருக்கிறோம் என்றார்.