இலங்கை வட மாகாண அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வலியுறுத்துவோம்... காங். தேர்தல் அறிக்கை
சென்னை: இலங்கை தமிழரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வட மாகாண அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க இலங்கை அரசை வலியுறுத்துவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. 55 அம்சங்களுடன் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கைத் தமிழர்களின் நாற்பது ஆண்டுகால பிரச்சினையைத் தீர்க்க பாரதப் பிரதமர் ராஜிவ்காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் இந்திய - இலங்கை உடன்படிக்கையை ஏற்படுத்தினார்கள். இந்த உடன்பாட்டின் அடிப்படையில், இலங்கை நாடாளுமன்றத்தில் 13வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த அடிப்படையில்தான் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். இதன்மூலம்தான் இலங்கைத் தமிழர்களுக்குச் சமவுரிமை, சமவாய்ப்பு கிடைக்கும்.
ஜனநாயகம் செயல்படுகிறது..
இலங்கையில் 2009இல் நடைபெற்ற போருக்குப்பிறகு, வடக்கு மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி சி.வி.விக்னேஷ்வரன் தலைமையில் அமைந்துள்ளது. இதன்மூலம் அங்கே ஜனநாயகம் செயல்பட தொடங்கியிருக்கிறது. அங்கே வாழ்கிற மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வடக்கு மாகாண அரசும், சமீபத்தில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்கள்.
காங்கிரஸ் அரசின் திட்டங்கள்
இலங்கைத் தமிழர்களுக்காகக் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இந்தியாவின் வீட்டுவசதி திட்டத்தின்மூலம் இலங்கையில் 50 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு தமிழர்கள் குடியமர்த்தப்பட்டு உள்ளார்கள். அங்கே புதிய மருத்துவமனைகள், சம்பூர் மின் நிலையம், 118 கிலோ மீட்டர் கொண்ட தென்பகுதி ரயில்வே திட்டம், 252 கிலோ மீட்டர் கொண்ட வட பகுதி ரயில்வே திட்டம், காங்கேசன் துறைமுகம் அமைத்தல், பலாலி விமான நிலையம் புனரமைப்பு எனப் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. மேலும், புதிய கல்விக்கூடங்கள், விவசாயத்திற்கு டிராக்டர், இடுபொருள்கள், மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள், உபகரணங்கள், வீட்டுவசதி ஆகியவை செய்துதரப்பட்டுள்eன.
உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
இலங்கையில் வாழ்கிற இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம் தமிழர்கள் என ஏறத்தாழ 50 லட்சம் பேர் அங்கே தங்கள் வாழ்வாதாரத்தை நம்பியுள்ளார்கள். அவர்களது உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும் என்பதில் இந்திய அரசு மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வட மாகாண அரசுக்கு அதிகாரம்
இலங்கையில் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்கிற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசை வலியுறுத்துகிற வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிற வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்க இலங்கை அரசை வலியுறுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.