வழக்கு பாயனுமா? குடகில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு போலீஸ் குடைச்சல்
குடகில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தமிழக போலீஸ் மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை: முதல்வர் எடப்பாடி தரப்பு அணிக்கு வராமல் போனால் வழக்குகள் பாய்வது உறுதி என குடகில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு போலீஸ் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. தற்போது இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறது திமுக.
குடகில் தமிழக போலீஸ்
எடப்பாடி தரப்புக்கு மேலும் நெருக்கடி தரும் வகையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்யலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென தமிழக போலீசார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் கர்நாடகாவின் குடகு ரிசார்ட்டுக்கு சென்றனர்.
வழக்கு பாயும் என மிரட்டல்
அங்கு எம்.எல்.ஏக்களிடம், முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டால் வழக்குகள் பாயாமல் இருக்கும் என கூறியுள்ளனர். அத்துடன் உங்கள் மீதான வழக்குகள் தற்போது தூசுதட்டப்பட்டுவிட்டது எனவும் மிரட்டியுள்ளனர்.
ஆடிப் போன எம்.எல்.ஏக்கள்
மேலும் உங்கள் மீது புதியதாகவும் வழக்குகள் நிச்சயம் வரும்; குடும்பத்தினரிடமும் சொல்லிவிட்டோம் என கூறியுள்ளனர். இதில் சில எம்.எல்.ஏக்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்களாம்.
பொங்கிய தங்க தமிழ்ச்செல்வன்
ஆனால் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச் செல்வன் ஆகியோர் போலீசாரின் இந்த மிரட்டலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மற்ற எம்.எல்.ஏக்களையும் சமாதானப்படுத்தி எது நடந்தாலும் 'தினகரன் சார்' பார்த்துக் கொள்வார் என தேற்றியுள்ளனராம்.