கடைகளை மூடி, பெட்ரோல் போடுவதை நிறுத்தி.. கலாமுக்கு அஞ்சலி செலுத்திய தமிழகம்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்காக ஒட்டுமொத்தமாக தனது இயக்கத்தை நிறுத்தி இரங்கல் தெரிவித்து அந்த மக்களின் தலைவருக்கு பிரியா விடை கொடுத்தது.
தமிழக வரலாற்றில் முதல் முறையாக அரசியல்வாதி அல்லாத ஒரு மகத்தான தலைவருக்காக நடந்த முதல் முழு அடைப்பு இது என்பதால் அப்துல் கலாம் அதிலும் வரலாறு படைத்துள்ளார்.
தமிழக அரசு இன்று தனது அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்திருந்தது. அதேபோல தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. சில தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் அரசின் உத்தரவைக் காதில் போட்டுக் கொள்ளாமல் தத்தமது வேலையில் ஈடுபட்டிருந்தன. இது ஊழியர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்தாலும் கூட வேறு வழியி்ல்லாமல் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.
காலையில் சிறிது நேரம் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விற்பனைக்காக மளிகைக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.
பெட்ரோல் பங்குகள் காலை 10 மணி முதல் 11 மணி வரை செயல்படாமல் மூடி வைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் இன்று நடைபெறவில்லை. அதேபோல தியேட்டர்களிலும் படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
பொதுமக்கள் ஆங்காங்கு கலாம் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியதைக் காண முடிந்தது. வழக்கமாக, அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களுக்குத்தான் இப்படி தெரு முனைகளில் படம் வைத்து மக்கள் வணங்குவார்கள். காந்திக்குக் கூட இப்படி வைத்து வணங்கியதைக் கண்டதில்லை. ஆனால் கலாம் மறைந்த செய்தி வெளியானது முதல் இன்று உடல் நல்லடக்கம் முடிந்தது வரை தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அவரது படத்தை வைத்து மக்கள் வணங்கியது உருக்கமாக இருந்தது.
சென்னையில், முக்கிய வணிகப் பகுதிகளான பாரீஸ், புரசைவாக்கம், பர்மா பஜார் உள்பட பல பகுதிகள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் இதே நிலைதான்.