நாளை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்- உச்ச கட்ட பரபரப்பில் கட்சிகள்!
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழக சட்டசபையில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் வளர்மதி (அ.தி.மு.க.), ஆனந்த் (தி.மு.க.), சுப்பிரமணியம் (பாஜக), அண்ணாதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஹேமநாதன் (ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் 24 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் அ.தி.மு.க, தி.மு.க, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 4 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது.
வேட்பாளர்கள் நேற்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இறங்கினார்கள். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தேர்தல் பணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த அரசியல் கட்சியினர் நேற்று மாலையே வெளியேறிவிட்டனர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 129 ஆகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படுகிறது.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு வேட்பாளர்களின் பெயர் சின்னங்கள் அடங்கிய வேட்பாளர் சீட்டு பொருத்தப்பட்டு அவை அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
இதே போல் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள எழுது பொருட்கள் உள்பட 50 வகையான ஆவணங்கள் மற்றும் பொருட்களும் பைகளில் போடப்பட்டு சரிபார்க்கப்பட்டன.
நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறும். வாக்குப்பதிவு காட்சிகள் அனைத்தும் தமிழக அரசின் கேபிள் டி.வி நிறுவனம் மூலம் உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
வாக்குப்பதிவின் போது மோதல் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக விரிவான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஸ்ரீரங்கம் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்தும் 300 போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். துணை ராணுவ படையினர் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் ஆயுத படை போலீசார் உள்பட மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் மூடி முத்திரையிடப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.
16 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அன்று மதியத்துக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை பாதுகாப்பு அறைகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வேன்களில் போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி துவங்கியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள மண்டல அதிகாரிகள் இதனை எடுத்துச்செல்கின்றனர்.